எழுத்ததிகாரத்துள் இதனைக் ‘குறைச்சொற்கிளவி’ என்று ஓதினமையால் வட நூலாசிரியர் தாது என்று குறிப்பிட்ட சொற்களே இவையென்று கொள்ளப்படும்; அவையும் குறைச்சொல்லாதலான். அஃதேல் தொழிற்பொருண்மை யுணர்த்துவன வெல்லாம் இதனுள் ஓதினாரோவெனின், வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல்மேன (உரி.2) என்றாராகலின், வழக்கின்கட்பயிற்சி இல்லாத சொற்கள் ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க. தொழிலாவது வினையும் வினைக்குறிப்பு மாதலின், அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன ஈண்டுக் கூறப்படுகின்றன. நச்சினார்க்கினியர் இது தமக்கியல்பில்லா இடைச்சொற்போலாது இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருட்கு உரியவாய் வருதலின் ‘உரிச் சொல்லோத்து’ என்னும் பெயர்த்தாயிற்று. ஈறுபற்றிப் பலபொருள் விளக்கலும் உருபேற்றலும் இன்றிப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின் உரிச்சொல், பெயரின் வேறென்றுணர்க. வெள்ளைவாரணனார் உரிச்சொற்களின் இலக்கணம் உணர்த்தினமையால் இஃது உரியியல் என்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளையுடையவாகிப் பெயர் வினைகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99 ஆக இளம்பூரணரும், 100 ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98 ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியல் முதற்சூத்திரத்தால் உரிச்சொற்கு இலக்கணம் உணர்த்திய தொல்காப்பியர், உரிச்சொற்களின் பொருளை யுணருங்கால் அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றி உணர்தலாகாமையின் பொருள் வெளிப்படாத உரிச்சொற்கள் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே எடுத்தோதி ஈண்டுப்பொருள் உணர்த்தப்படும் என இவ்வியல் இரண் |