சார்ந்துள்ள சொல்லின் பொருள் சிறப்படைய முழு உரிமையை ஏற்று உயர்வடையச் செய்வதால் உரிச்சொல். பெயர் வினை என்ற சொற்களில் எச்சொல்லைச் சார்ந்துளதோ அச்சொல்லுக்கு முன்பின் ஏதாவது ஓர் இடத்தில் நின்று இசைப் பொருள், குறிப்புப்பொருள், பண்புப் பொருள் என்ற இடப் பொருட்களுள் ஏதானும் ஒரு பொருள் தர ஏனைச் சொற்களைவிட சார்ந்துள்ள சொற்களுக்கு உரியதாய் அமைவதால் உரிச்சொல்லாயிற்று.1 சிவலிங்கனார் யாப்பிலக்கணத்தில் மாச்சீர், விளச்சீர் எனும் ஈரசைச் சீர்கள் ஆசிரியப்பாவுக்கு உரிமைப்படுத்தப்பட்டு ஆசிரியவுரிச்சீர் எனப்பட்டன. காய்ச்சீர் வெண்பாவுக்கு உரிமைப்படுத்தப்பட்டு வெண்பாவுரிச்சீர் எனப்பட்டது. கனிச்சீர் வஞ்சிப்பாவுக்குரிமைப் படுத்தப்பட்டு வஞ்சியுரிச்சீர் எனப்பட்டது. (கலிப்பாவுக்கு என உரிய சீர் இல்லை.) பாக்களுக்கு உரிமைப் படுத்தப்பட்ட காரணத்தால் உரிச்சீர் எனப்பட்டன. அகப்பாடல்களில் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பொருள்கள் உண்டு ஓர் அகப்பாடலை இது எத்திணையைச் சாரும் என அறிதற்கு அவை துணை புரியும். முதற்பொருள் கருப்பொருள்களைக் கொண்டு இன்ன திணை என ஒரு பாடலைக் கூறமுடியும் என்றாலும் அப்பாடலி்ல் வரும் பொருள் (கருத்து) கொண்டே இன்ன திணை என வரையறுக்கப்படும். ஏன் எனின் முதற்பொருளோ கருப்பொருளோ இல்லாமல் வரும் பாடலையும் அதன் கருத்துப் பொருள் கொண்டு இன்ன திணை என வரையறுக்கலாம். அன்றியும், ‘உரிப்பொருளல்லன மயங்கவும் பெறும்’ (தொல் பொருள், அக 13) எனவே திணை வரையறைக்குக் கருத்துப் பொருளே உரிமையாக்கப் பட்டது. அதனால் கருத்துப்பொருள் உரிப்பொருள் எனப்பட்டது. உரிச்சீர் உரிப்பொருள் போலவே உரிச்சொல்லுக்கும் காரணம் காணுதல் வேண்டும். பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் தெளிவாகப் பொருள் தருவன. உரிச்சொல்
1. எனக்கு, டாக்டர் அ.நா. பெருமாள் மூலம் அனுப்பி வைத்த உரிச்சொல் பற்றிய கட்டுரையில் உள்ள விளக்கம் இது. |