பலவும் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணம் மூவகைப் பொருளும் பற்றி வருதலேயாம். வெள்ளைவாரணனார் இச்சூத்திரம் உரிச் சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது. இதன் பொருள் : உரிச் சொல்லை விரித்துக் கூறுமிடத்து. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள் மேல் தோன்றி, பெயரிடத்தும் வினையிடத்தும் தம்முருபு தடுமாறி, ஒரு சொல் பல பொருட்கு உரித்தாய் வரினும், பல சொல் ஒரு பொருட்கு உரித்தாய் வரினும். வழக்கிற் பெருக வழங்காத சொல்லைப் பயின்று வழங்குஞ் சொல்லோடு சார்த்திப் பெயரும் வினையும் ஆகிய தத்தமக்குரிய நிலைக் களத்தின்கண் யாதானும் ஒரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப்படும் என்றவாறு. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளையுடையனவாய்ப் பெயரையும் வினையையும் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் தம்முருபு தடுமாறி ஒரு சொல் ஒரு பொருட்குரித்தாதலேயன்றி, ஒரு சொல் பல பொருட்கும் பல சொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச் சொல்லாம் என்றும், அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றிப் பொருளுணர்த்தலாகாமையின், வெளிப்படப் பொருளுணர்த்தாதனவற்றை வெளிப்படப் பொருளுணர்த்துஞ் சொற்களோடு சார்த்தித் தம்மையே எடுத்தோதிப் பொருளுணர்த்தப்படும் என்றும் உரிச் சொற்கெல்லாம் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்தும் முறையும் உணர்த்தியவாறு. கறுப்பு தவ என்னும் உரிச் சொற்கள் முறையே பெயராயும் வினையாயும் தம்முருபு தடுமாறின. துவைத்தல், துவைக்கும் என்பன முறையே பெயர்க்கும் வினைக்கும் முதனிலையாயின. ஆதித்தர் உரிச் சொற் பொருளை விளக்குவோமாயின், ஒலி பற்றியும் குறிப்புப் பற்றியும் பண்பு பற்றியும் தோன்றும் பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் தம் |