1உ-ம்: வெளிப்படு சொல்லாவன உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும்; உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும், இணைவிழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும், அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன. இனி வெளிப்பட வழங்காதன கூறப்படுகின்றன. நச் இஃது உரிச்சொற்களுள் யான் கூறப்படுவன இவை என்கின்றது. இ-ள் : வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டாபொருள் புலப்பட்ட உரிச்சொற்கள் எல்லாரும் அறிதலின் எடுத்து ஓதிப் பொருள் உணர்த்துதல் வேண்டா, வெளிப்படவாரா உரிச்சொல் மேனபொருள் புலப்பட வாராத உரிச்சொல் மேலன யான் பொருள் புலப்பட ஓதுதல்,எ-று. வெள். இஃது உரிச்சொற்களுள் இவ்வியலிற் கூறப்படுவன இவையென வுணர்த்துகின்றது. இ-ள் : வழக்கின்கண் எல்லாரானும் அறியப் பொருள் வெளிப்பட வழங்கும் உரிச்சொற்களை ஈண்டு எடுத்துக்கூறுதல் வேண்டா; எல்லாரானும் வெளிப்படப் பொருள் அறியப்படாத உரிச்சொல் மேலன பின்வரும் சூத்திரங்கள், எ-று. வழக்கினுள் எல்லாரானும் அறிந்து பயிலப்படும் உரிச்சொற்களை மீண்டும் எடுத்துரைத்தலாற் பயனின்மையின் அச்சொற்கள் இவ்வியலில் எடுத்துரைக்கப்பட மாட்டா; பலராலும் பயிலப்படாத உரிச்சொல்லே இவ்வியலில் எடுத்துரைக்கப்படும் என ஆசிரியர் வரையறை செய்து கொண்டவாறு, மேல் என்பது மேன எனத் திரிந்து நின்றது. பொருள் வெளிப்பட வாரா உரிச்சொற்களைப் பின்வரும் நூற்பாக்களில் ஆசிரியர் கிளந்தோதி விரிக்கின்றார்.
1. அயிறல், மிசைதல் என்னும் உரிச்சொற்கள் உண்டல் என்னும் பொருளை வெளிப்படையாக உணர்த்துவன. அதனால் அவ்வுரிச்சொற்கள் பற்றிக் கூறாமல் வெளிப்படையாகப் பொருள் உணர்த்தல் ஆற்றா உரிச்சொற்களே கூறப்படும் என விளக்கம் காண்க. துஞ்சல் முதலியவற்றுக்கும் இப்படியே காண்க. |