இடைச் சொல்லாவது : - பெயர்ப் பொருளையும் வினைப் பொருளையும் வேறுபடுத்தும் இயல்பினதாய் அவற்றின் வழி மருங்கு தோன்றி அவற்றொடு ஒருங்கு நடை பெற்றியல்வதாகும். இடைச் சொற்களுள் ஒரு சாரன பெயரும் வினையுமாகிய சொற்களினின்றுதிரிந்தும், சிதைத்தும், சுருங்கியும், இலக்கணக் குறியீடாக அமைத்துக்கொண்ட இடுங்கிய சொற்களாக வருதலானும், ஒரு சாரனபெயருமாகாமல் வினையுமாகாமல் அவற்றிற்கு இடைப்பட்டனவாக வருதலானும், ஒரு சாரன பெயர், வினைகள், திணைபால் இடம் கால முதலியவற்றைக் காட்டுதற்குரியஉறுப்பாக இடப்படுதலானும், பொதுவாக இவையாவும் இடைச்சொல் என்னும் சாரணக்குறியீடு பெற்றன. ஆதலின், இடை என்னும் சொல் இடுங்குதல், இடை நிகர்த்தல், இடப்படுதல் என்பவற்றிற்குப் பொதுவாக நின்றது. புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதவுவனவாய் வரும் சாரியைகளுள் பலவும், வேற்றுமையுருபுகளுள் பலவும் பெயர், வினைகளின் இடுங்கிய சொற்களாம். இவை பற்றி அவ்வவ்வியல்களுள் ஓரளவு விளக்கப்பட்டது. கொன், தஞ்சம், அந்தில் முதலியவை பெயர்ப் பொருட்டாயும் வினைப்பொருட்டாயும் நிற்றலையும், உவமஉருபிடைச் சொற்கள் வினைப்பொருட்டாய் நிற்றலையும், ஏ.ஓ,மன்,தில் முதலியவை பெயர் வினைகட்கு இடைப்பட்டனவாய் நிற்றலையும் கண்டு கொள்க. அம், ஆம், அன், ஆன், முதலிய ஈற்றிடைச் சொற்கள் திணைபால் இடம் ஆகியவற்றையும்-உம், க, உ, இன், முதலிய ஈற்றிடைச் சொற்கள் காலம், இடம், ஆகியவற்றையும் த், ட், ற் முதலிய இடைநிற்கும் இடைச்சொற்கள் காலத்தையும் காட்டற்கு இடப்படுதலையும்கண்டு கொள்க. மற்று இவை பெயரையும், வினையையும் இடமாகக் கொண்டு தோன்றுதலின், இடச்சொல் என்பதே இடைச்சொல் என்பதாயிற்று என்பார் ஒரு சாரார். பெயர்ச்சொல் வினைச் சொற்களுக்கு அடிப்படையாகிய குறைச் சொற்கள் (நிரம்பா உரிச் சொற்கள்) உருவு திரிந்தும் திரியாமலும் நிரம்பிப் பெயர்-வினைகட்கு முதனிலையாய் நிற்குங்கால் அவை உரிச்சொற்களாகும். அவை திணைபால் இடம் காலம் காட்டும் இடைச் சொற்களோடு புணர்ந்து முழுமை பெற்ற பின்னரே பெயர்ச் சொல் என்றும் வினைச் |