‘இடைச்சொற்கிளவியும் உரிச்சொற்கிளவியும் அவற்றுவழி மருங்கிற்றோன்றும்’ (பெய.5) என்றதனால் இடைச்சொல் பெயரும் வினையும் சார்ந்துவரும் என்பது பெறப்பட்டது. ‘பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்’ என ஈண்டு மீண்டும் கூறியது, ‘பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருளுடைய வல்ல என்றவாறு’என இதன்பொருளை விளக்குவர் சேனாவரையர். எனவே இடைச்சொற்கள் பொருளுணர்த்தும் வழித் தமக்கெனப் பொருளின்றிப் பெயர்ப் பொருண்மையுணர்த்தியும் வினைப்பொருண்மையுணர்த்தியும் அவற்றைச் சார்ந்தல்லது தனித்து வாரா என வலியுறுத்தவாறு. உ-ம் : ‘அது கொல்தோழி காமநோயே’ எனவும், ‘வருகதில் அம்ம எம் சேரி சேர’ எனவும் கொல், தில் என்னும் இடைச்சொற்கள் முறையே பெயரையும் வினையையும் சார்ந்து நின்று அப்பொருளை வெளிப்படுத்தவாறு காண்க. பெயரையும் வினையையும் சார்ந்து வருதல் இடைச்சொற்கும் உரிச் சொற்கும் உரிய பொது விலக்கணம். தமக்கெனப் பொருளின்மை இடைச் சொற்குச் சிறப்பிலக்கணமாகும். ‘பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் தமக்கியல்பில’ எனப் பொதுப்படக் கூறியவதனால் இடைச் சொற்கள் தம்மாற் சாரப்படும் சொல்லின் வேறாய் வருதலேயன்றி, உண்டனன் உண்டான் எனவும், என்மனார், என்றிசினோர் எனவும், அருங்குரைத்து எனவும் அச்சொற்கு உறுப்பாய் வருதலும் கொள்ளப்படும். ஆதித்தர் : இடைச் சொல் பெயரொடும் வினையொடும் சேர்ந்து பயிலப் பெறும், தனியாகப் பயிலப்பெறும் இயல்பு இல்லை. எனப்படுப-என்பவை ; பகுதிப் பொருள் விகுதி நடை பெறுதல் வழங்கப் பெறல். விளக்கம் முன் கூறியவற்றில் காண்க. சுப்பிரமணிய சாஸ்தியார் ‘பெயரொடும்... தமக்கியல்பில’ என்பதன் பொள்:- சேனாவரையர், ‘ஈண்டுப் பெயரும் வினையும் உணர்த்தும் |