பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருளுடையவல்ல’ என்று கூறுகின்றார். நச்சினார்க்கினியரும் அவ்வாறே கூறுகின்றார். அஃதாவது இரண்டாம் வேற்றுமைப் பொருள் முதல் ஏழாம் வேற்றுமைப் பொருள் வரையில் ஆறு வேற்றுமைப் பொருள்களும் முடியப் பெறுந் தகுதி மரம் முதலிய பெயர்களுள்ளே இருத்தலால் ‘மரத்தை’ என்னுமிடத்து ‘ஐ’ உருபு மரம் செயப்படுபொருளேயன்றிக் கருவி முதலியன அன்று என்பதைக் காட்டும். அவ்வாறே விகுதிகளும் பகுதிப் பொருளையே காட்டும் என்பது. அது வேற்றுமை யுருபுகளின் விஷயத்து ஓருவாறு பொருந்தினும் விகுதி விஷயத்தைக் குறித்து ஆராய்வோமாயின் பொருந்தாமை காணலாம். ‘தீமையன் என்னுமிடத்து, ‘தீமை’ என்ற சொல் பண்பைக் குறிக்கும். ‘அன்’ என்பது பண்பியைக் குறிக்கும். தீமை என்பதிலேயே பண்பியைக் குறிக்கத் தகுதி இருக்கின்றது என்று கூறுவது பொருத்தம் இன்று. அம்முறையே ‘நடந்தான்’ என்னுமிடத்தும் ‘நட’ என்பது தொழிலையும், ‘ஆன்’ என்பது அத்தொழிலைச் செய்பவனையும் குறித்தலால், ‘நட’ என்றபகுதியே செய்பவனையும் காட்டத் தகுதியுடைத்து என்பது பொருத்தமின்று. தீமையின் நடந்தான் முதலிய இடங்களிற் போலவே ‘மரத்தை’ முதலிய இடங்களிலும் மரம் என்பது மரமாகிய பொருளைக் குறிக்கும்; ஐ முதலியன செயப்படு பொருள் கருவி முதலியவற்றில் ஓன்றாம் என்பதைக் குறிக்கும் என்று கூறுவதே சால்புடைத்து. பெயர், வினை இவற்றின் புறத்தில் வரும் அந்தில், தஞ்சம் என்பவனவற்றிற்குத் தனியே பொருள் உள என்பது வெளிப்படை. இச்சூத்திரம் இடைச் சொல்லின் இலக்கணம் கூறுவதன்று. ‘தமக்கியல்பிலவே’ என்பதற்கு உரைகாரர்கள் கூறிய பொருளும் பொருத்தம் இன்று. எனின், இச்சூத்திரத்தின் பொருள்தான் யாது என்ற ஐயம் தோன்றலாம். அதற்கு விடை:- ‘இடைச் சொற் கிளவியும்’ என்ற சூத்திரம், இடைச்சொல் என்பது வெளிப்படையாயும் குறிப்பாயும் பெயரொடும் வினையொடும் சார்ந்து வரும் என்பதை உணர்த்த, இச்சூத்திரம் மரம், காளை, நட, போ, வேறு முதலிய பெயர் வினைகளைப் போல் இடைச்சொல் தனித்து நின்று பொருள் விளக்காது என்று உணர்த்துகின்றது என்னலாம். ஈண்டுப் பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் என்பது அனுவதிக்கப்பட்டது என்க. |