காணலாமென்பதும் புலனாகும். இதுபற்றிய விரிவான விளக்கத்தை எனது மெய்ம்மயக்க ஆய்வுக்கட்டுரையுள் கண்டுகொள்க. |
மற்று இதனொடு அடுத்த சூத்திரத்தையும் சேர்த்து ஒரு சூத்திரமாக வைத்து உரை காணலே முறைமையாயினும் உரையாசிரியன்மாரான் நேர்ந்த வழக்கினை மாற்றாமல் இவ்வுரை வரையப்படுகின்றது. ஆதலின் பின்வரும் நூற்பாக்கள்தொறும் இதனைக்கூட்டிப் பொருள் கொள்க. |
சூ. 23: | டறலள என்னும் புள்ளி முன்னர்க் |
| கசப என்னும் மூவெழுத் துரிய |
(23) |
க-து: | கசப என்பவை டறவொடும் லளவொடும் மயங்கும் என்கின்றது. |
பொருள்:மெய்ம்மயங்குடனிலை தெரியுங்காலைச்சொற்கு உறுப்பாக டற என்னும் வல்லெழுத்தும் லள என்னும் இடையெழுத்தும் புள்ளியாக நிற்க அவற்றின் முன் தொடரும் கசப என்னும் (உயிர்) மெய்யெழுத்துக்கள் அவ்வொலியொடு மயங்கற்கு உரியவாகும். |
எ - டு | வட்கார் - கற்க, - செல்க - கொள்க எனவும் |
| வெட்சி - முயற்சி - வல்சி - நீள்சினை எனவும் |
| நுட்பம் - கற்பனை - செல்ப - கொள்ப எனவும் வரும் |
இவை ஒருசொல் - நீள்சினை என்பது வினைத்தொகை மொழி. முட்காடு - கற்குவியல் - பல்குன்றம் - வாள்கடிது எனப் புணர் மொழிக்கண்ணும் கண்டுகொள்க. |
இவை வல்லெழுத்தொடு மயங்குங்கால் தம் வன்மை திரியாமலும் இடையெழுத்தொடு மயங்குங்கால் திரிபுற்றும் நிற்றலை ஒலித்தறிக. மெய், புள்ளி, உயிர்மெய் என்பவை மெய்யின் நிலைகளேயாதலின் ஈண்டு வந்தியையும் மெய் உயிர்மெய் என்றறிக. மயக்க இலக்கணம் முழுதிற்கும் இதனைக் கடைப்பிடிக்க. |
சூ. 24: | அவற்றுள் |
| லளஃகான் முன்னர் யாவவும் தோன்றும் |
(24) |
க-து: | லள என்னும் இடையெழுத்தின் முன், யவ என்னும் இடையெழுத்து மயங்குமெனக் கூறுகின்றது. |
பொருள்:மேற்கூறிய நான்கனுள் லள என்னும் இடையெழுத்துக்கள் புள்ளியாக நிற்க அவற்றின் முன் ய வ என்னும் (உயிர்) மெய்யெழுத்துக்களும் தொடர்ந்து மயங்குதற்குரியவாம். |