பக்கம் எண் :
 
New Page 1

        ‘பொலபொல வென வுதிர்ந்தது கண்ணீர்’
        ‘வள்வள்’ என்று நாய் குரைக்கும்!
        ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’
                    ‘மளமள வெனத் தேர்தல் நடந்தது’.

    பளீர் என அறைந்தான்: சுள்ளெனப்பட்டது; கதுமென எழுந்து
(பெரிய. பு) என்பன இரட்டாமையின் வெறும் குறிப்பொலிச் சொல்லாயின. 
துடிதுடித்தான், சுறுசுறுப்பு என்பன கூறு பொருளுடைத்தேனும்
முன்னொட்டுப் பொருளின்மையின் இரட்டைக்கிளவியே.

    ‘சடுகுடு’வை இங்கமைக்க.  தைத்தாள் தையற் சடுகுடுப் பொறியால் (குடும்ப விளக்கு.)

பண்படை

300. நூ: ‘இனச்சுட்டில்லாப் பண்படைப் பெயர்ச்சொல்
        வழக்காறல்ல: செய்யுளாறே.’

    பொ: இனம் பிரித்துச்சுட்டாத பண்படையோடு வரும் பெயர்ச்சொல்
வழக்கில் இல்லை; செய்யுட்களில் வரும்.

    சா: செஞ்ஞாயிறு, வெண்ணிலவு: என்பன செய்யுட்கண்
இனச்சுட்டில்லாப் பண்படைப் பெயர்ச்சொல். மின்விசிறி; மகிழ்வுந்து
முதலியன இனச்சுட்டுள்ள பண்படை வழக்கு.  காற்பந்து, இரட்டை மாட்டு
வண்டி என்ற மிகு வழக்கும் இற்றே.

301. நூ: சினைமுதற் கோரடை வழக்கே: ஈரடை
       சினைமுதற் சாருதல் செய்யுட்காகும்.

    பொ: சினைக்கும் முதலுக்கும் ஓரடை செறிதல் வழக்காம். அவற்றிற்கு
இரண்டடை பொருந்துதல் செய்யுளாம்.

    சா: வ: பச்சைக்கிளி, மலைப்பழம், அடுக்கு மல்லிகைச்செடி செ:
முழங்குதிரைப் புனலருவி (குற்றாலக்குறவஞ்சி.) செழுநீர்ப் புனற்கங்கை
(தேவாரம்) என்பனவும், செங்கால் நாராய் என்பதும் செய்யுட்காதல் கொள்க.

முதல் - சினை

302. நூ: ‘முதலை ஐயுறின் சினையைக் கண்ணுறும்
        அதுமுதற் காயின் சினைக்கை யாகும்.’

    பொ: முதற்பொருளை ஐ உருபு பொருந்தினால் சினையை ஏழன் உருபு
(கண்) பொருந்தும்.  ‘அது’ உருபு முதலுக்கு வந்தால் சினைக்கு ஐ உருபு
வரும்.

    அது என்பதை இரட்டுற மொழிவான் சுட்டாக்கிமேல் இல்லுருபைச்
சுட்டிற்றெனவுமாம்.