பக்கம் எண் :
 
New Page 1

‘றன’வை இறுதிவைக்கும் பண்டைமுறைமை காரணத் தெளிவின்மையும்
குழப்பமும் உடைமையின் மேற்கண்டாங்கே பயிற்றலாம்.

7. நூ: அ இ முதல் சேய்மை அண்மைச்சுட்டு.

    பொ: அ, இ இரண்டும் சொல் முதலில் நின்று சேய்மைப்
பொருளையும், அண்மைப்பொருளையும் சுட்டிக்காட்டும். (சுட்டுவிரல் என்னும்
வழக்கொடு பொருத்திக்காண்க.)

    சா: அவன்; இப்பையன்.

    வி: இடைப்பால் சுட்டும் உகரச்சுட்டு வழக்கழிந்தது.  இவற்றுள் அவன்
என்பது சுட்டடிப் பெயராய்த் தோன்றி, பிரிப்பின் சிதையுமாறு சுட்டு -
சொல்லகப்பட்டு நிற்றலின் அகச்சுட்டு என்றும் அம் மகன் என்பது
அவ்வாறின்றிச் சொல்முற் புறத்து நிற்றலின் புறச்சுட்டு என்றும்
பின்னுரையாளர் கூறுவர்.  ஆயின் வினாவிற்குச் செல்லாமையின்
முழுவலிவிலவாம்.

8. நூ: ஆ ஓ இறுதி எ யா முதல் வினா.

    பொ: ஆ, ஓ இரண்டும் சொல் இறுதியிலும், எ, யா எனும் இரண்டும்
சொல் முதலிலும் வினவும் கருத்தால் வினா எழுத்துகளாம்.

    சா: எது; யாது; அவனா; அவனோ
        “அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ!”

    வி: ஏ என முன் வரும் ஏது, ஏன் என்னும் இருசொல்லும் எது, என்
என்பனவற்றின்திரிபே.  ஏவன் - எனக்காட்டும் பிறவும் திரிபே.  இதை
ஏற்பின் ‘உயர்நலம் உடையவன் யவனவன்’ எனயா-யதிரிபும் ஏற்க
வேண்டுவதாம். எனவே ‘ஏ’ (மொழிமரபு) தொல்காப்பியர் கருத்துப்படி
இறுதியில் வரும் தன்மையதாதல் வேண்டும். ஓ இக்கால் வழக்கில்
ஒளிந்தாங்கு ஏ ‘ஆ’ வினாவிலேயே அடங்கிற்றுப் போலும்.

    ‘முழுதும் அறியாததை எது என்றும் சிறிது தெரிந்ததை யாது என்றும்
வினாவுக’ என்னும் பிரிப்புணர்வு தெளிவிலது.

    நீ தந்தாய்?  வந்தாய் நீ? என வினாவெழுத்து ஒலிப்பில் மறைந்து
வினாப்பொருள் தருவதையும் ஈண்டே அடக்குக.

9. நூ: ‘குறில்பின் வலிமுன் இடைப்படும் ஆய்தம்.’

    பொ: தனிக்குறிலெழுத்தையடுத்து இருந்து தனக்குப்பின் உயிர்மெய்
வடிவேற்ற வல்லெழுத்துகளைச் சார்ந்து இடைப்பட ஆய்தம் வரும்.