பக்கம் எண் :
 
107

107. நூ: செய்து செய்ய செய்யின் என்றே
        எய்தும் காலத் தாலவை மூவகை.

 

    பொ: செய்து செய்ய செய்யின் என்று இறப்பு நிகழ்வு எதிர்வு முதலிய
மூன்றுகால முறைக்குத்தக வினையெச்சம் மூவகையாம் (செய்து என்னும்
வாய்பாட்டினே ஓடி, அருளி முதலிய இகர இறுதிச் சொற்களை அடக்குவர்)


    சா: உலகம் அறிவியலில் விரைந்து ஏறுகிறது
        தமிழ் பயிலப் பற்று மிகுகிறது.
        இந்தி பயிலின் உயர்பணி கிடைக்குமாம்.

    செய்யும் என்னும் வாய்பாடு செய்தால் என்றும் வழக்குப்படும்.

    பண்பு வளர்ந்தால் (வளரின்) பார் நிரம்பும்.  செய்ய என்னும் வாய்பாடு
பெரிதும் நிகழ்வில் வரும் எனினும் எதிர்வுக்கும் சிறுபால் உரித்தே.  மழை
பெய்ய பயிர் விளைந்தது (இறப்பு).  மழை பெய்ய வான் மூடிற்று (எதிர்வு)
பிற எச்சங்கள் பெருவழக்கின்மையின் விடுத்தாம்.  இகர இறுதி
வினையெச்சம் உகர இறுதி முதனிலையில் எச்சக்குறியாம் இகரம் ஏறி
அமைவதே பெரும்பான்மை.  சிறுபால் சிவணி அணரிபோலும்
மெய்ம்மேற்படுவன வழக்கொழிந்தன.

108. நூ: செய்தென் எச்சம் தன் முதல் வினையுறும்
       ஏனை இரண்டும் தன் அயல் வினைகொளும்.

    பொ: செய்தென்னும் வாய்பாட்டெச்சம் தன் முதல் வினையைக்
கொண்டு முடியும்; பிற செய்ய, செயின் இரண்டும் தன் முதல் வினையையும்
அயல் முதல் வினையையும் கொள்ளும்.

    சா: கண்டு மகிழ்ந்தான்.
        காணமகிழ்ந்தான்; தலைவன்வர நாணினள்.
        காணின் மகிழ்வான்; நீவரின் தருவேன்.

    செய: நாமம் கெடக்கெடும்நோய்; சுடச்சுட நோக்கிற்பவர்க்கு

    செயின்: ‘உண்ணற்க கள்ளை; உணின் உண்க’

        ‘இடைக் கொட்கின் எற்றா விழுமம்தரும்’
        (உறின் நட்டு அறின் ஒரூஉம்) (திருக்குறள்)

    செய்தென் எச்சம் சிறுபால் பிறவினை கொளலும் உண்டு.  ‘ஞாயிறு
பட்டு வந்தான்’ என்பது பழஞ்சான்று.

    சா. ‘பத்தடித்து வந்தான்’ போல்வது வழக்கு.

109: நூ: குறைவினையோடு காலம்காட்டிப்
        பிறநான் கறியப் பிறிதொருபெயரை
        நாடிநிற்பது பெயரெச்சம்மே.