பக்கம் எண் :
 
170

170. நூ: ஆவொடு இல்அல் எதிர்மறை இடைநிலை.

    பொ: ஆ, இல், அல் எதிர்மறுப்பதைக் காட்டும் இடைநிலைகளாம்.

    சா: ஓடான், கண்டிலன், காணலன்.

171. நூ: நெடில் முதல் மூவிட இறுதிகள் எதிர்மறை
       இடைநிலை ஆமுன்வரின்மறைந் தொலிக்கும்.

    பொ: நெடில் முதல் எழுத்தாக அமைந்துள்ள படர்க்கை தன்மை முன்னிலை இறுதிநிலைகள் ஆ என்னும் எதிர்மறை இடைநிலைக்குமுன் வந்தால் ‘ஆ’ இடைநிலை மறைந்து இருப்பினும் மறுத்தொலிக்கும்.

    சுருங்கக் கூறியவாற்றான் அடங்காத ‘அ’ என்னும் பலவின் பால் இறுதியை அடக்கிக்கொள்க.

    சா: வாரான், வாராள், வாரார், வாரா, வாரேன், வாரோம், வாரேம்,
வாராம், வாராய், வாரீர், (வாராதீர்) என்பனவற்றைக் காண்க.  வாரானைப்
பருவம் (வரு+ஆனை) என்பதன் திரிபே.  எதிர்மறைப் பொருள்தரும் ‘ஆ’
மறைந்தது என்னாது இறுதிநிலை முதல் எழுத்து மறைந்தது எனல் ‘ஆ’
முதல்கட்கு இயையினும் வாரோம், வாரேம், வாரேன், வாரீர்
போல்வனவற்றிற்கியையாமை காண்க.  அதனாலே ‘வாரா’ என்னாது வாரா
என நின்றது.

172. நூ: ஏனை இரண்டும் இலக்கிய வழக்காய்க்
       குறில்முதல் இறுநிலைக் கொளியாதுரியன.

    பொ: அல், இல் என்னும் இரண்டும் இலக்கிய வழக்கில் பயில்வதாய்க்
குறில் முதலெழுத்துடைய இறுதிநிலைகளைத் தாங்கி ஒளியாது வெளிப்பட
நிற்கும்.

    சா: உண்டிலன், உண்ணலள், உண்டிலர், காணலர், உண்டில,
உண்டிலது, உண்டிலன், உண்ணலன், உண்டிலெம், உண்ணலம், உண்டிலன்,
உண்ணலிர்.

    பயனில்சொல் பாராட்டுவானை மகனெனல் என்புழி மறைந்துவந்தது;
மக்கட் பதடி ‘எனல்’ என இயல்பின் இறுதிநிலை நிற்றல் நோக்கிப்போலும்.

    ஓடாப்புட்கை உரவோர்மருக (புறம்) வாராவிருந்து வந்த களையில்
(பாவேந்தன்) முதலியன ஓடாத, வாராத என்னும் பெயரெச்சங்கள் ஈறுகெட்டு
நின்றன.  எதிர்மறை உருபிற்கு அடுத்துநின்ற ‘த’கர இடைநிலை காலங்
காட்டாதன எனக்கொள்க.  இவை இறந்தகாலம்போல் தோன்றினும், பிறஇரு
காலத்திற்கும் வேறு எச்சம் இன்றி இதுவே செல்தலானும், போகாதீர்
போல்வனதெளிவாய் எதிர்காலங் காட்டலானும் ‘த’கரம் காலம் இலதே.