பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்165முத்துவீரியம்

(இ-ள்.) முற்கூறிய ஒருமைத்தன்மை யேழனுள் செய்கெனுஞ் சொல் வினையோடு
முடியுமாயினும் முற்றுச்சொல்லாதலிற்றிரியாவாம்.

(வ-று.) காண்கு வந்தேன்.

(வி-ரை.) வினை முற்றுக்கள் எல்லாம் பெயர்கொண்டு முடிதலே இயல்பு.
வினைமுற்றுக்கள் பெயர்கொண்டு முடியும்பொழுது முற்றென்று பெயர்பெறும்; அவை
வினைகொண்டு முடிகின்றபொழுது எச்சம் என்று பெயர் பெறும். இவற்றிற்கு விதிவிலக்காக
இருப்பன மூன்று. (1) செய்கு, (2) செய்கும், (3) மார். இவை வினைகொண்டு முடியினும்
முற்றென்றே பெயர் பெறும்.

ஏனைய முற்றுக்கள் எல்லாம் பெயர்கொண்டு முடியுங்கால் முற்றென்றும்,
வினைகொண்டு முடியுங்கால் எச்சம் என்றும் பெயர்பெற, இவை மட்டும் வினைகொண்டு
முடியினும் முற்றே யாதற்குக் காரணம் என்ன என்பதைச் சேனாவரையர் விளங்க வுரைப்பர்.
அது வருமாறு:

(1) காண்கு வந்தேன் என்பதில் காண்கு என்பது செய்கென் எச்சமாகும். இது காண
வந்தேன் என எதிர்காலப் பொருளை யுணர்த்தும். இது வினை முதல் வினையே
கொண்டுமுடியும். இது வந்தேன் என்னும் வினைகொண்டு முடிந்தமையின் எச்சமாயிற்றெனின்,
காணவந்தேன் எனச் செயவெனெச்சமாகவே திரிக்கவேண்டும். காண்கு என்பதைக் காண எனத்
திரிப்பதில் காலவழு இல்லையேனும் காண்கு என்பது தன் வினைமுதல் வினையேகொண்டு
முடியக் ‘காண’ என்பது தன்வினை முதல் வினையையும் பிற வினையையும் கொண்டு
முடிதலின் வழுவாம். இதனை வேறு வகையாகத் திரித்தற்கும் இயலாது. ஆதலின் இது
முற்றென்றே பெயர் பெறும்.

(2) ஏனைய முற்றுக்களெல்லாம் பெயர்கொண்டு முடிதல் பெரும்பான்மை யாதலின்,
வினைகொண்டு முடியின் எச்சமாயிற் றென்றனர். ஆனால், செய்கென் கிளவி முதலியனவோ
வினைகொண்டு முடிதலே பெரும்பான்மை யாதலின் அதனையே இலக்கணமாகக் கொண்டு
முற்றென்று கருதினர்.

(3) அகத்தியனாரும்,

‘‘முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்
முற்றுச்சொ லென்னு முறைமையிற் றிரியா’’

என நூற்பா யாத்ததும் இக்கருத்தினையே வலியுறுத்தும். (தொல் - சொல் - இளம் -
விளக்கவுரை - 201) (10)

உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று

604. அன்ஆன் அள்ஆ ளிறுதிக் கிளவி
     உயர்திணை யொருமைப் படர்க்கைச் சொல்லே.