பக்கம் எண் :
 
பொருளதிகாரம்258முத்துவீரியம்

(வ-று.)

ஒருங்கட மூவெயி லொற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கட மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இருங்கட மூடும் பொழிலெழிற் கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி யோவிங்கு வாழ்பவர்க்கே. (திருக். 55)

(கு-ரை.) இரும் கடம் மூடும் - பெரிய காட்டினால் சூழப்பட்ட.

பெயர் வினாதல்

என்பது, பதிவினாவவும் அதற்கொன்றுங் கூறாதாரை, நும் பதிகூறுதல் பழியாயின்,
அதனை யொழிமின், நும் பெயர் கூறுதல் பழியன்றே அது கூறுவீராமினென்று அவர் பெயர்
வினாவல்.

(வ-று.)

தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன ஆருங் கறைமிடற் றம்பல வன்கயிலை
ஊரென்ன என்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேல்
பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. (திருக். 56)

மொழிபெறாது கூறல்

என்பது, பெயர் வினாவவும் வாய்திறவாமையின், இப்புனத்தார் எதிர் கொள்ளத்தக்க
விருந்தினரோடு வாய்திறவாமை விரதமாக வுடையார், அதுவன்றி வாய்திறக்கின் மணிசிந்து
மென்பதனைச் சரதமாக வுடையார், ஆதலின் இவ்விரண்டனுளொன்று தப்பாதெனக் கூறி
மொழிபெறாது கூறல்.

(வ-று.)

இரத முடைய நடமாட் டுடையவர் எம்முடையர்
வரத முடைய அணிதில்லை யன்னவர் இப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல்
சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே. (திருக். 57)

(கு-ரை) இரத முடைய நடம் - கட்கு இனிமையான நடனம். சரதம் உடையர் - (வாய்
திறப்பின் சலக்கென மணி விழும்) மெய்மையுடையவர்.