நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் என்றது-நன்னெறிக்கட் செல்லா நின்ற தொன்னலப் பொருண்மைக் கண்ணும் என்றவாறு. |
நன்னெறியாவது அறம் பொருளின்பம் வழுவாதநெறி. தலைமகன் சிறப்புத் தொன்று தொட்டு வருதலிற் குடிநலத்தைத் தொன்னல மென்றார். இதனாற் சொல்லியது அறம்பொருள் இன்பங்களை வழாமல் தன் குலத்திற் கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் நடத்துதற் கண்ணும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு. |
உதாரணம் |
“தடமருப் பெருமை மடநடைக் குழவி தூண் தொறும் யாத்த காண்தகு நல்லில் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண்டமர்த்த கண்ணள் தகைபெறப் பிறை நுதற் பொறித்த சிறு நுண் பல்வியர் அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து அட்டிலோளே அம்மா அரிவை எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று சிறிய முள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங் காண்கம்மே”1. |
(நற்றிணை-120) |
இதனுள் ஊடற் குறிப்பினளாகிய தலைவி மனைவாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று. |
1. பொருள் : எருமைக் கன்றுகள் கட்டப்பட்டு காண்தகும் வீட்டில், காதணியுடைய செய்ய பேதையாகிய நம் தலைவியானவள் விரல் சிவக்கும்படி வாழையிலை அரிந்து தண்டு பிளந்து ஒழுங்குபடுத்தித் தாளிதப் புகையுண்ட கண்ணளாய் நெற்றிவியர்வையைப் புடைவைத் தலைப்பால் துடைத்து நம்மையும் புலந்தவளாய்ச் சமையல் அறையில் உள்ளாள். இப்போது எங்களுக்கு விருந்து வருக; வரின் அவள் என்னைச்சினவாள். சிறிய முட்போலும் பல் சிறிது தோன்ற விருந்தை வரவேற்கப் புன்முறுவல் கொள்ளும் அவள் முகத்தைக் காண்போம். |