இதன் பொருள் :- பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை - மூவகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை மனைவியர்க்குப் பின்னர் முறையாற் செய்து கொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனைவியரை, தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் -பழைதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக்கொண்டு எதிரேற்றுக் கோடற் சிறப்பினும். இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும் - இனிய பூண்களை யணிந்து தொன்முறை மனைவி புதல்வனைக் கோலங்காட்டிய செல்வாள் போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும், கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் இங்ஙனஞ் செய்கையுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தமை செய்து ஒழுகியவற்றை நினைந்து, ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் - அப்பரத்தையர் கண் நிகழ்கின்ற காதல் நிலை குலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் என்றவாறு. |
உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று. என்னை, இளமைப் பருவங் கழியாத காலத்து அக்காதன் மீளாதாகலின் “பெரும் பொருள்’ என்றார். வேதநூல் அந்தணர்க்குப் பின்முறை வதுவை மூன்றும் அரசர்க்கிரண்டும் வணிகர்க் கொன்றும் நிகழ்த்தல் வேண்டுமெனக் கூறிற் றென்பது உணர்த்துதற்கு. |
இனி மகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்றுமாம். ‘ஆக்கிய’ என்றதனானே வேளாளர்க்கும் பின் முறை வதுவை கொள்கை. தொன்மனைவி யென்னாது. ‘முறை’ என்றதனானே அவரும் பெருஞ்சிறப்புச் செய்து ஒரு கோத்திரத்தாய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். |
இங்ஙனந் தொன்முறையார் பின்முறையாரை மகிழ்ச்சி செய்தமை கண்டு இத்தன்மையாரை இறந்தொழுகித் தவறு செய்தேமேயென்றும் பின் முறையார் அவர் புதல்வரைக் கண்டு மகிழ்ச்சி செய்து வாயில் நேர்ந்த குணம் பற்றி இவரை இறந்தொழுகித் தவறு செய்தேமேயென்றும் பரத்தைமை நீங்குவனென்றார். ‘புகினும்’ எனவே பிறர்மனைப் புதல்வரென்பது பெற்றாம். தொன்முறை மனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க. |
இனி பரத்தைமையிற் பிரிவொழிந்து மனைக்கண் இருந்ததற்கு |