இறையனார் அகப்பொருள் - களவு 11
 

னும் வனப்பானும் பொருளானும் பெறலாவது அன்று, தவஞ்செய்தாற் பெறல்
ஆம்;

     என்னை,


       
‘‘வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம்
         ஈண்டு முயலப் படும்’
               (குறள், தவம்-5)


       என்பதாகலான் என்பது. அது கேட்டு, இனி யானும் தவஞ்செய்து
இதனைப் பெறுவல் என்று, அதன்மாட்டு வேட்கையால், தவஞ்செய்யும்;
செய்யாநின்றானைப், ‘பாவீ, இதன் பரத்ததோ வீடுபேற்றின்பம்?’ என்று,
வீடுபேற்றின்பத்தை விரித்து உரைக்கும். அதுதான் பிறப்புப் பிணி மூப்புச்

சாக்காட்டு அவைக் கவலைக் கையாற்றின் நீங்கி, மணியினது ஒளியும்,
மலரினது நாற்றமும், சந்தனத்தது தட்பமும்போல, உள்நின்று எழுதரும் ஒரு
பேரின்ப வெள்ளத்தது என்பது கேட்டு, அதனை விட்டு,

வீடுபேற்றின்கண்ணே அவாவிநின்று, தவமும் ஞானமும் புரிந்து, வீடு

பெறுவானாம் என்பது. அவனை வஞ்சித்துக் கொண்டுசென்று,

நன்னெறிக்கண் நிறீயிஇன்மையின் களவியல் என்னுங் குறி பெற்றது.


        
இதுகற்க நாற்பொருளும் பயக்கும் என்பது

      இனி, புகழ் பொருள் நட்பு அறன் என்னும் நான்கினையும் பயக்கும்,
இது வல்லனாக; என்னை, கற்றுவல்லன் என்பதனின் மிக்க புகழ் இல்லை,
உலகத்தாரானும் சமயத்தாரானும் ஒருங்கு புகழப்படுமாகலான் என்பது.
இனிப், பொருளும் பயக்கும்; என்னை, பொருளுடையாரும்

பொருள்கொடுத்துக் கற்பராகலின் என்பது. இனி, நட்பும் பயக்கும்; என்னை,
கற்றாரைச் சார்ந்து ஒழுகவே எமக்கும் அறிவுபெருகும் என்று பலருஞ்
சார்ந்து ஒழுகலின் என்பது. இனி, அறனும் பயக்கும்; என்னை, ஞானத்தின்
மிக்க கொடை இன்மையான் என்பது.
இது பயன்.

         இனிக்,
காலம் என்பது - கடைச்சங்கத்தார் காலத்துச்
செய்யப்பட்டது.

         இனிக்,
களம் என்பது - உக்கிரப்பெருவழுதியார் அவைக்களம்
என்பது.
 
        காரணம் என்பது - அக் காலத்துப் பாண்டியனும் சங்கத்தாரும்
பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற்
பெருமானடிகளால் வெளிப்படுக்கப்பட்டது.