‘தோழிக் குரியவை கோடாய் தேஎத்து’
(இறையனார்-14)
என்ற சூத்திரத்திற் சொல்லிப் போந்தாம்; அவ்வகை அறத்தொடு நிற்கும்.
நிற்கச், செவிலித்தாய் இன்புற்ற மனத்தளாய், ‘என்மகள் பெரிது
அறிவுடையளே காண்’ என்று, அவ்வாறு நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்.
நற்றாயும் இன்புற்ற மனத்தளாய்த் தந்தைக்கும் தன் ஐயன்மார்க்கும்
அறத்தொடு நிற்கும். நிற்க, அவரும் அவளது அறிவும் ஆசாரமும் கேட்டு
இன்புற்ற மனத்தராய்ச் சொன்மறுத்துத் தலையிறைஞ்சி நிற்பர். இங்ஙனஞ்
சென்று மாட்சிப்பட்டுக் காட்டுமேயெனின், பெரிதும் மாட்சிப்பட்டுக்
காட்டிற்று. காட்ட, ‘இவள் நீரில் ஆற்றிடைப்போய் வருந்துங் குறை
யென்னை?’ என்று தலைமகனைச் செலவழுங்குவிக்கும்; அவ்வகையாற்
சொல்லுமதற்குச் செய்யுள்:
செல்லுந் தலைவனைச் செலவழுங்குவித்தல்
‘பாயப் புரவி கடாய்வந்து பாழிப் பகைமலைந்தார்
தேயச் சிலைதொட்ட தென்னவன் தேந்தண் பொதியிலின்வாய்
வேயொத்த தோளிநும் மோடு வரவு விரும்பவுந்தன்
ஆயத் தவரை நினைந்துகண் ணீர்கொண் டலமந்தவே.’
(177)
‘விளம்பழங் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் தோறு நோவர் மாதோ
அளியரோ அளியரென் ஆயத் தோரென
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.’
(நற்றிணை, 12)
இதுகேட்ட தலைமகன் செலவழுங்கும், அழுங்க, ‘நாளை நீர்
வரைந்து புகுதும்’ என்று தவிர்த்துப் பெயர்ந்து தலைமகளுழை வந்து,
‘நிழலும் நீரும் உடையவாய்க் கானந் தண்ணியவானாற் சேறும்’ என்று
உடன்போக்கு அழுங்குவித்தவிடத்துத், தலைமகனும் அந்நாள் வரைவொடு
விரைந்து புகுவானாம். இது வெளிப்பட்ட பின்றைக் கிளவியும்
உரியவாயினவாறு.
இனி, உம்மையால், உடன்போக்கும் உரித்தாமாறு: அவ்வாறு
அறத்தொடுநிலை மாட்சிமைப்பட்டது இல்லையாயின், இரவுக்குறிக்கண்
தலைப்பெய்விக்குமாறுபோலத் தலைமகளை
|