126இறையனார் அகப்பொருள்

  ‘பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
  இனியறிந் தேனது துனியா குதலே
  கழல்தொடி யாஅய் மழைதவழ் பொதியின்
  வேங்கையும் காந்தளும் நாறி
  ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே.’              (குறுந்-84)

என்று, பின்னுங் கவன்று ஆற்றாளாய், ‘இவ்வகைப்பட்டகானம்
இவ்வகைப்பட்டாள் எவ்வகை செல்லுங்கொல்லோ?’ என்னும், அதற்குச்
செய்யுள்:
                    
சுரம்நினைந்திரங்கல்

  ‘வேடகம் சேர்ந்தவெங் கானம் விடலைபின் மெல்லடிமேற்
  பாடகம் தாங்கி நடந்ததெவ் வாறுகொல் பாழிவென்ற
  கோடக நீள்முடிக் கோன்நெடு மாறன்தென் கூடலின்வாய்
  ஆடக மாடங் கடந்தறி யாதஎன் ஆரணங்கே.’             (186)

  இவ்வகை மெல்லியவாகிய அடி இவ்வகை வெய்யவாகிய கானம் எவ்வகை
சென்றனகொல்லோ’ என்னும்; அதற்குச் செய்யுள்:

                     
அடிநினைந்திரங்கல்

  ‘நளிமுத்த வெண்மணல் மேலும் பனிப்பன நண்பன்பின்போய்
  முளியுற்ற கானம் இறந்தன போல்மொய்ந் நிறந்திகழும்
  ஒளிமுத்த வெண்குடைச் செங்கோல் உசிதன் உறந்தையன்ன
  தெளிமுத்த வாண்முறு வற்சிறி யாள்தன் சிலம்படியே.’       (187)

இனிச், செவிலி பின்சென்றாள் சுரத்திடைக் குரவினொடு புலம்பிச்
சொல்லியதற்குச் செய்யுள்:
                     
 குரவொடு வருந்தல்

  ‘மழைகெழு கார்வண்கை வானவன் மாறன்வண் கூடலன்ன
  இழைகெழு கொங்கையென் பேதையொர் ஏதில னோடியைந்திக்
  கழைகெழு குன்றம் கடப்பவும் நீகண்டு நின்றனையே
  தழைகெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண்குரவே.’        (188)

  ‘நினைப்பரும் புண்ணியஞ் செய்தாய் குரவே நெடுங்களத்து
  வினைப்பொலி மால்களி றுந்திவென் றான்வியன் நாட்டகத்தோர்
  மனைப்பொலி பாவை பயந்தேன் வருந்தவும் நீகடத்துள்
  எனைப்பல பாவை பயந்துமெய் தாயொர் இருந்துயரே.’      (189)

  ‘வில்லவன் தானை நரையாற் றழிந்துவிண் ணேறவெல்ல
  வல்லவன் மாறனெங் கோன்முனை போல்சுரம் வாணுதலாள்
  சொல்லவன் பின்சென்ற வாறென்ற போழ்தெனக் குச்சொல்லுமே
  பல்லவம் ஆக்கித்தன் பாவை வளர்க்கின்ற பைங்குரவே.’    (190)