சூத்திரம்-29
காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்
நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்
வரைவெதிர் கொள்ளாது தமரவண் மறுப்பினும்
அவனூ றஞ்சுங் காலம் ஆயினும்
அந்நா லிடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ
அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே.
என்பது என்னுதலிற்றோ எனின், மேற் சூத்திரத்துள் அறத்தொடு நிற்கும்
நிலை உணர்த்திப் போந்தார்; இனி அறத்தொடு நிற்கும் இடம் கூறுவான்
எடுத்துக்கொண்டார் என்பது, அஃது உணர்த்துதல் நுதலிற்று.
மேற்சூத்திரத்தோடு இயைபு என்னையோ எனின், மேல்
அறத்தொடுநிலை யதிகாரம் வாராநின்றதாகலான் என்பது.
இதன் பொருள்; காப்புக் கைமிக்குக் காமம்
பெருகினும் என்பது-
காவல் கைமிகப்பாட்டின் வேட்கை பெருகினும் என்றவாறு; நொதுமலர்
வரையும் பருவம் ஆயினும் என்பது - அயலார் வரைந்துபுகுங் காலமாயினும்
என்றவாறு; வரைவு எதிர்கொள்ளாது தமர் அவண் மறுப்பினும் என்பது -
வரைவு ஏற்றுக்கொள்ளாது தமர் அவ்விடத்து மறுப்பினும் என்றவாறு; அவன்
ஊறு அஞ்சும் காலம் ஆயினும் என்பது-அவற்கு நிகழும் ஏதம் அஞ்சின
இடத்தும் என்றவாறு; அந்நாலிடத்தும் மெய்நாண் ஒரீஇ என்பது - அந்
நாலிடத்தும் மெய்க்கண் நின்ற நாண் நீங்கி என்றவாறு; அறத்தொடு நிற்றல்
தோழிக்கும் உரித்தே என்பது - அறத்தொடு நிற்கும் நிலைமை தோழிக்கும்
உரித்து என்றவாறு.
‘காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்’ என்பது - காப்பு என்பது
இரண்டு வகைத்து, நிறைகாவல் சிறைகாவல் என.
அவற்றுள், நிறைகாவல் என்பது-காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகுதல் என்றவாறு,
‘சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை’
(குறள்-57)
என்பதாகலான்.
இனிச், சிறைகாவல் என்பது - தாய் துஞ்சாமை, நாய்
துஞ்சாமை,
ஊர்துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவுவெளிப்படுதல், கூகைகுழறல்,
கோழிகுரற்காட்டல் என இவை.
|