50இறையனார் அகப்பொருள்

     ‘சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை
     கான யானை யணங்கி யாஅங்கு
     இளையள் முளைவா ளெயிற்றள்
     வளையுடைக் கையளெம் அணங்கி யோளே
’     (குறுந் - 119)

     ‘எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
     புலவர் தோழ கேளா யத்தை
     மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
     பகுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
     கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
     புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே
.’   (குறுந் -129)


                     
கழறியுரைத்தல்
 

      இவ்வாறு சொல்லக் கேட்ட பாங்கன் கழறும். கழறுதல் என்பது
அன்புடையார்மாட்டுத் தீயன கண்டால் அவ்வன்பில் தலைப்பிரியாத
சொற்களால் நெருங்குவது. கழறுமாறு: ‘‘குன்றம் உருண்டாற் குன்றி
வழியடையாகாதவாறு போலவும், யானை தொடுவுண்ணின் மூடுங்கலம்
இல்லதுபோலவும், கடல் வெதும்பின் வளாவுநீர் இல்லதுபோலவும்,
எம்பெருமான், நின் உள்ளம், அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடியின்
வரைத்தன்றிக் கைம்மிக்கு ஓடுமேயெனின் நின்னைத் தெருட்டற்பால
நீர்மையார் உளரோ, நீ பிறரைத் தெருட்டின் அல்லது? அப்பெற்றியாய நீ,
இன்னதோர் இடத்து இன்னதோர் உருவுகண்டு, என் உணர்வு அழியப்
போந்தேன்’ என்றல் தக்கின்று’’ என்னும். அதற்குச் செய்யுள்:

 
 ‘ஆய்கின்ற தீந்தமிழ் வேந்தன் அரிகே சரியணிவான்
   தோய்கின்ற முத்தக் குடைமன்னன் கொல்லியஞ்சூழ் பொழில்வாய்
   ஏய்கின்ற ஆயத் திடையோ ரிளங்கொடி கண்டெனுள்ளம்
   தேய்கின்ற தென்ப தழகிய தொன்றோ சிலம்பனுக்கே
’        (28)

   ‘தண்டேர் நறைநறுந் தார்மன்ன ராற்றுக் குடிதளரத்
   திண்டேர் கடாய்ச்செற்ற கொற்றவன் கன்னிச் செழும்பொழில்வாய்
   வண்டேர் நறுங்கண்ணி யாயங்கொர் மாதர் மதிமுகநீ
   கண்டே தளரினல் லாரினி யாரிக் கடலிடத்தே
.’             (29)
 

                        கழற்றெதிர்மறை

     இவ்வாறு பாங்கன் கழறத், தலைமகன் ஆற்றானாய்ச் சொல்லும்
சொற்கள் கழற்றெதிர்மறை என்பது. அதற்குச் செய்யுள்: