இதன் பொருள்: தத்தந் திரிபே சிறிய என்ப - உயிர்களும் மெய்களும் ஒவ்வொரு தானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக் கூறினேமாயினும் நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய தம்முடைய வேறுபாடுகள் சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு, |
அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றானுந் தலைவளி நெஞ்சுவளி மிடற்றுவளி மூக்குவளி என்றவாற்றானும் பிறவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடையோர் கூறி உணர்க. ஐ விலங்கலுடையது. வல்லினந் தலைவளியுடையது. மெல்லினம் மூக்குவளியுடையது. இடையினம் மிடற்றுவளியுடையது. ஏனையவுங் கூறிக் கண்டு உணர்க. |
(6) |
89. | ககார ஙகார முதனா வண்ணம். |
|
இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது. |
இதன் பொருள்: ககார ஙகாரம் முதல் நா அண்ணம் - ககாரமும் ஙகாரமும் முதல் நாவும் முதல் அண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு. |
உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினுந் தனிமெய்யாகக் கூறிக் காண்க. முதலை இரண்டிற்குங் கூட்டுக. க ங என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(7) |
90. | சகார ஞகார மிடைநா வண்ணம். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: சகார ஞகாரம் இடைநா அண்ணம் - சாகரமும் ஞகாரமும் இடைநாவும் இடையண்ணமும் உறப் பிறக்கும் என்றவாறு. |
இடையை இரண்டிற்குங் கூட்டுக. ச ஞ என இவற்றின் வேறுபாடு உணர்க. |
(8) |
91. | டகார ணகார நுனிநா வண்ணம். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: டகார ணகாரம் நுனி நா அண்ணம் - டகாரமும் ணகாரமும் நுனிநாவும் நுனியண்ணமும் உறப்பிறக்கும் என்றவாறு. |