புணரியல்131

உதாரணம்: விளவிற்கு கோஒற்கு ஒருபாற்கு அதற்கு என வரும்.
 

இதனை 'அளவாகு மொழிமுதல்' (எழு - 121)  என்பதன்பின்  வையாது
ஈண்டு  வைத்தது  னகர  ஈறுகளெல்லாம் உடன் திரியுமென்றற்கு. ஆண்டு
வைப்பின்   இன்சாரியையே   திரியுமென்பது  படும்.   'ஒன்றுமுத  லாகப்
பத்தூர்ந்து  வரூஉ  -  மெல்லா  வெண்ணும்'  (எழு - 199)  என்பதனான்
ஒருபாற்கு என்பதனை முடிக்க.
 

(21)
 

124.

ஆனி னகரமு மதனோ ரற்றே
நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. 
 

இஃது ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியுமென்கின்றது.
 

இதன் பொருள்: நாள்முன் வரூஉம் வன்முதற்தொழிற்கு - நாட்பெயர்
முன்னர்   வரும்   வல்லெழுத்தை    முதலாகஉடைய    தொழிற்சொற்கு
இடையேவரும்,   ஆனின்  னகரமும்  அதனோரற்று  - ஆன்சாரியையின்
னகரமும் நான்கனுருபின்கண்  வரும்  ஆன்    சாரியைபோல  றகரமாய்த்
திரியும் என்றவாறு.
 

உதாரணம்: பரணியாற்கொண்டான்  சென்றான் தந்தான்  போயினான்
எனவரும்.  'நாண்முற் றோன்றுந் தொழினிலைக்  கிளவிக்கு'  (எழு - 247)
என்றனான் ஆன்சாரியை கொடுத்துச் செய்கை  செய்க.  இனி  உம்மையை
இறந்தது தழீஇய தாக்கி  நாளல்லவற்றுமுன்  வரும்  வன்முதற்றொழிற்கண்
இன்னின்    னகரமும்    அதனோடு    ஒக்குமெனப்   பொருளுரைத்துப்
பனியிற்கொண்டான்   வளியிற்கொண்டான்     என  இன்னின்  னகரமும்
றகரமாதல் கொள்க.
 

இனி, 1ஞாபகத்தால்  தொழிற்கண்   இன்னின்   னகரந்  திரியுமெனவே
பெயர்க்கண்   இன்னின்    னகரந்   திரிதலுந்   திரியாமையுங்  கொள்க.
குறும்பிற்கொற்றன்  பறம்பிற்பாரி   எனத்  திரிந்து  வந்தன.  குருகின்கால்
எருத்தின்புறம் எனத் திரியாதுவந்தன.
 

(22)

1. ஞாபகம்  கூறல்  என்னும்  உத்தியாவது,    சூத்திரஞ்  செய்யுங்காற்
சில்வகை எழுத்தினாலாகியதாகவும்   பொருணனி  விளங்கவுஞ்  செய்யாது,
அரிதும்  பெரிதுமாக  நலிந்து    செய்து    அதனானே     வேறு   பல
பொருளுணர்த்தல் ஞாபகத்தாற் கொள்க என ஒட்டுக.