தொகைமரபு155

இனி,   எல்லாவழியு    மென்றதனான்    உயர்திணை  வினைச்சொல்
இயல்பாயுந் திரிந்தும் முடிவன எல்லாங் கொள்க.  உண்கு  உண்டு  வருது
சேறு  உண்பல்  உண்டேன் உண்பேன்  என்னும்  தன்மை  வினைகளைக்
கொற்றா சாத்தா தேவா பூதா என்பனவற்றோடு ஒட்டுக. உண்டீர் ;  சான்றீர்
பார்ப்பீர்   என   முன்னிலைக்கண்ணும்   உண்ப,  உண்டார் ;  சான்றார்
பார்ப்பார்  எனப்  படர்க்கைக்கண்ணும் ஒட்டுக.  இவை  இயல்பு.  உண்ட
னெஞ்சான்றேம் உண்டேநாம் என்றாற்போல்வன திரிந்து முடிந்தன. பிறவும்
அன்ன.
 

(11)
 

154.

அவற்றுள்
இகர விறுபெயர் திரிபிட னுடைத்தே.

 

இஃது உயர்திணைப் பெயருட் சிலவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள்:  அவற்றுள்   இகர   இறுபெயர்  -  முற்   கூறிய
உயர்திணைப்  பெயர்களுள்   இகர   ஈற்றுப்பெயர்,   திரிபிடனுடைத்து -
இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து என்றவாறு.
 

எட்டிப்பூ   காவிதிப்பூ  நம்பிப்பேறு  என இவ்வுயர்திணைப் பெயர்கள்
வேற்றுமைக்கண் மிக்கு முடிந்தன. 1எட்டி காவிதி என்பன  தேயவழக்காகிய
சிறப்புப்பெயர். எட்டிமரமன்று. அஃது 'எட்டிக் குமர னிருந்தோன் றன்னை'
என்பதனான் உணர்க. இவை எட்டியதுபூ  எட்டிக்குப்பூ என விரியும். இனி
நம்பிக்கொல்லன்  நம்பிச்சான்றான்  நம்பித்துணை நம்பிப்பிள்ளை எனவும்,
செட்டிக்கூத்தன்  சாத்தன்     தேவன்     பூதனெனவும்   அல்வழிக்கண்
உயர்திணைப்பெயர்    மிக்கு      முடிந்தன.   இடனுடைத்தென்றதனான்
இகரஈறல்லாதனவும் ஈறு திரியாது நின்று  வல்லெழுத்துப் பெறுதல் கொள்க.
நங்கைப்பெண் நங்கைச்சானி என அல்வழிக்கட்  சிறுபான்மை  ஐகார  ஈறு
மிக்கன. இவ்வீற் றஃறிணைப்பெயர்  மிக்கு  முடிதல்  உயிர்  மயங்கியலுட்
கூறுப.
 

(12)

1. எட்டி காவிதி   என்பன   அரசரளிக்கும் சிறப்புப்  பெயர்  (பட்டப்
பெயர்).