280. | ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. |
|
இஃது ஐகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. தொகை மரபினுள் 'வேற்றுமை யல்வழி இஐ யென்னும்' (எழு - 158) என்பதன்கண் அல்வழி முடித்தார். |
இதன் பொருள் :ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஐகார ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :யானைக்கோடு செவி தலை புறம் என வரும். |
வேற்றுமையாயின் என்றதனான் உருபு புணர்ச்சிக்கண்ணும் யானையைக் கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க. |
(78) |
281. | சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும். |
|
இது வல்லெழுத்தினோடு வற்று வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : சுட்டுமுதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் :அவையற்றுக்கோடு இவையற்றுக்கோடு உவையற்றுக்கோடு செவி தலை புறம் என வரும். இதனை 'வஃகான் மெய்கெட' (எழு - 122) என்பதனான் முடிக்க. |
(79) |
282. | விசைமரக் கிளவியு ஞெமையு நமையு மாமுப் பெயருஞ் சேமர வியல. |
|
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : விசைமரக் கிளவியும் - விசைத்தற்றொழிலன்றி விசையென்னும் மரத்தை உணரநின்ற சொல்லும், |