இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையுமென இருவகைய. |
அவற்றுட் கருவி புறப்புறக் கருவியும், புறக் கருவியும், அகப்புறக் கருவியும், அகக்கருவியு மென நால்வகைத்து. நூன் மரபும் பிறப்பியலும் புறப்புறக் கருவி. மொழிமரபு புறக் கருவி. புணரியல் அகப்புறக்கருவி. 'எகர ஒகரம் பெயர்க் கீறாகா' (எழு - 272) என்றாற்போல்வன அகக்கருவி. |
இனிச் செய்கையும் புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புறச்செய்கையும், அகச்செய்கையுமென நால்வகைத்து. 'எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே' (எழு - 140) என்றாற் போல்வன புறப்புறச்செய்கை. 'லனவென வரூஉம் புள்ளி முன்னர்' (எழு - 149) என்றாற்போல்வன புறச்செய்கை. 'உகரமொடு புணரும் புள்ளியிறுதி' (எழு - 163) என்றாற்போல்வன அகப்புறச்செய்கை. தொகை மரபு முதலிய ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம் அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாந் தொகையாக உணர்க. |
இவ்வோத் தென்னுதலிற்றோ வெனின், அதுவும் அதன் பெயருரைப்பவே அடங்கும். |
இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின் இத் தொல்காப்பியமென்னும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மர பென்னும் பெயர்த்தாயிற்று. |
நூலென்றது நூல்போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவா றென்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளையெல்லாங் கைவன்மகடூஉத் தூய்மையும் நுண்மையு முடையவாக ஓரிழைப் படுத்தினாற் போல 'வினையி னீங்கி விளங்கிய வறிவ' (மரபியல் - 94) னாலே வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களையெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின்றாகவுந், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங்குற்றமுமின்றி ஈரைந்தழகுபெற, முப்பத்திரண்டு தந்திரவுத்தியோடு புணரவும், |