296 புள்ளிமயங்கியல்

இதன் பொருள் : நாயும்    பலகையும்     வரூஉங்     காலை   -
வல்லென்பதன்முன்  நாயென்னுஞ்சொல்லும்   பலகையென்னுஞ்  சொல்லும்
வருமொழியாய்  வருங்காலத்து,  ஆவயின்  உகரங்  கெடுதலும்  உரித்து -
அவ்விடத்து  உகரங்  கெடாது  நிற்றலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும்,
உகரங்  கெடுவழி  அகரம்  நிலையும் - அவ்வுகரங்  கெடுமிடத்து அகரம்
நிலைபெற்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் : வல்லநாய் வல்லப்பலகை என வரும்.
 

உம்மை  எதிர்மறையாகலான்  உகரங்   கெடாதே  நின்று  வல்லுநாய்
வல்லுப்பலகை என வருதலுங் கொள்க.
 

அகரம்    நிலையுமென்னாது     உகரங்    கெடுமென்றதனாற்   பிற
வருமொழிக்கண்ணும்   இவ்வகரப்பேறு   கொள்க. வல்லக் கடுமை சிறுமை
தீமை பெருமை என வரும். 
 

(79)
 

375.

பூல்வே லென்றா வாலென் கிளவியொ
டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. 

 

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : பூல்    வேல்     என்றா    ஆலென்கிளவியொடு
ஆமுப்பெயர்க்கும் -  பூலென்னுஞ்  சொல்லும்  வேலென்னுஞ்  சொல்லும்
ஆலென்னுஞ்  சொல்லுமாகிய  அம்மூன்றுபெயர்க்கும்,  அம் இடைவரும் -
வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடைவந்து முடியும் என்றவாறு.
 

உதாரணம் : பூலங்கோடு வேலங்கோடு ஆலங்கோடு செதிள் தோல் பூ
என வரும்.
 

வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒட்டுக. பூலஞெரி
வேலஞெரி   ஆலஞெரி   நீழல்   விறகு   என   வரும்.   என்றா என
எண்ணிடையிட்டமையாற் 1பூலாங்கோடு  பூலாங்கழி என ஆகாரம் பூலுக்குக்
கொள்க. 
 

(80)

1. பூலாங்கோடு ஆகாரமும் மெல்லெழுத்தும் பெற்று வந்தது.