இனி, அகரத்தின்பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின்பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் 'அ-இ-உ அம் மூன்றுஞ் சுட்டு' (எழு - 31) எனச் சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஐம்பாற்கண்ணும் பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களோடு பிறப்பு ஒப்புமைபற்றி, ஐகார ஒளகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும் பிறப்பு ஒப்புமைபற்றி ஏகார ஓகாரங்களின் பின்னர் ஐகார ஒளகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடு கூடிநின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழியாகாத சிறப்பின்மைநோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ-இ-உ-எ என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றான் என மெய்யோடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களோடு கூடிச் சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம் மெய்யோடு கூடியே தன் பொருள் உணர்த்துவதல்லது தானாகப் பொருளுணர்த்தாதென்று உணர்க. இன்னும் அ-ஆ-உ-ஊ-எ-ஏ-ஒ-ஓ-ஒள என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ-ஈ-ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தோடு குற்றெழுத்திற்கு ஓசை இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்களாதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுட் பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க. |