திரிதலானும் றகாரமும் னகாரமுஞ் சேரவைத்தார்.இவை தமிழெழுத்தென்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடையெழுத்துக்களில் யகாரம் முன் வைத்தார், அதுவும் உயிர்கள்போல மிடற்றுப்பிறந்த வளி அண்ணங்கண்ணுற்று அடையப் பிறத்தலின், ரகாரம் அதனோடு பிறப்பு ஒவ்வாதேனுஞ் செய்கைஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமுந் தம்மிற் பிறப்புஞ் செய்கையும் ஒவ்வாவேனுங் கல்வலிது சொல்வலிது என்றாற்போலத் தம்மிற் சேர்ந்து வருஞ் சொற்கள் பெரும்பான்மை யென்பதுபற்றி லகாரமும் வகாரமுஞ் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபிலவேனும் 'இடையெழுத் தென்ப யரல வழள' (எழு-21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேரவைத்தார்போலும். |
இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார். அதனை உருவென்றே கோடும். அது செறிப்பச் சேறலானுஞ், செறிப்ப வருதலானும், இடையெறியப்படுதலானுஞ், செவிக்கட்சென்று உறுதலானும், இன்ப துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங்கூடிப் பிறத்தலானுந், தலையும் மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்குமென்றமையானும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடத்திற்கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமையென்று ஓதியமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்தலென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்றதென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம். |