42நூன்மரபு

4.

ஆ ஈ ஊ, ஏ ஐ
ஓ ஒள என்னு மப்பா லேழு
மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள  என்னும் அப்பால் ஏழும் -
ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள   என்று  சொல்லப்படும்  அக்கூற்றேழும்,  ஈரளவு
இசைக்கும்  நெட்டெழுத்து என்ப - ஒரோவொன்று இரண்டு மாத்திரையாக
ஒலிக்கும்   நெட்டெழுத்து   என்னுங்   குறியினையுடைய  என்று கூறுவர்
ஆசிரியர் ; என்றவாறு.
 

எனவே, அளவுங் 1காரணக்குறியும்  இங்ஙனம் உணர்த்தி மேல் ஆளுப.
ஐகார  ஒளகாரங்கள்  குறிய  எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய
இனந் தமக்கின்றேனும் மாத்திரை யொப்புமையான் நெட்டெழுத் தென்றார்.
 

'ஆ ஈ ஊ' 'ஏ ஐ' என்பனவற்றைச் சொற்சீரடியாக்குக. 
 

(4)
 

5.

மூவள பிசைத்த லோரெழுத் தின்றே.
 

இஃது   ஐயம்  அகற்றியது ;  ஓரெழுத்து   மூவளபாயும்   இசைக்குங்
கொல்லோவென்று ஐயப்படுதலின்.
 

இதன் பொருள் : ஓரெழுத்து  மூவளபு  இசைத்தலின்று - ஓரெழுத்தே
நின்று மூன்று மாத்திரையாக இசைத்தலின்று ; என்றவாறு.
 

எனவே,  பல  எழுத்துக்  கூடிய இடத்து  மூன்று மாத்திரையும் நான்கு
மாத்திரையும் இசைக்கு மென்றவாறு.
 

எனவே,  பெரும்பான்மை  மூன்று  மாத்திரையே  பெறுமென்றார். பல
எழுத்தெனவே, நான்கு மாத்திரையும் பெறுதல் பெற்றாம்.
 

(5)

1. காரணக்குறி - காரணப்பெயர்:  என்றது  குற்றெழுத்து நெட்டெழுத்து
என்னும் பெயரை. குறிய இசையை யுடையதாகிய எழுத்து; நெடிய இசையை
யுடையதாகிய  எழுத்து  என்பது   கருத்து.  குற்றெழுத்து,  நெட்டெழுத்து
என்பன  பண்புத்தொகை.  மேலாளுப  என்றது நெட்டெழுத்தென மேலும்
எடுத்தாளுதலை.