48நூன்மரபு

இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது ஏனையுயிர்கட்கும்
ஒக்கும்.
 

ஒளகாரவிறுவாய்   என்பது   பண்புத்தொகை .  உம்மை  முற்றும்மை.
1'அகரமுதல்' என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார்.
 

(8)
 

9.

2னகாரவிறுவாய்ப்,
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.
 

இஃது உயிரல்லனவற்றைத் தொகுத்து ஓர் குறியீடு கூறுகின்றது.
 

இதன் பொருள் : னகரவிறுவாய்ப்   பதினெண்  எழுத்தும்  - ககாரம்
முதல் னகாரம்  ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும், மெய்யென மொழிப
- மெய்யென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

இதுவும்   ஆட்சியுங்   காரணமும்   நோக்கிய    குறி.   என்னை ?
பன்னீருயிர்க்குந்   தான்   இடங்கொடுத்து  அவற்றான் இயங்குந் தன்மை
பெற்ற உடம்பாய் நிற்றலின்.
 

னகாரவிறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. 3முன்னர்
னகாரவிறுவாயென்புழி    முப்பதெழுத்திற்கும்   ஈறாமென்றார்.   ஈண்டுப்
பதினெட்டெழுத்திற்கும் ஈறா மென்றாராதலிற் கூறியது கூறிற்றன்று.
 

(9)

1. 'அகரமுதல்'  என  முற்கூறிப்  போந்தமையின்  என்றது  -  முதற்
சூத்திரத்தில்  'அகரமுதல்'  எனக் கூறியமையை. எனவே ஆண்டுக் கூறிய
அதனை ஈண்டுக் கூறிய 'ஒளகார விறுவாய்' என்பதனோடு சேர்த்து 'அகர
முதல்' ஒளகார  விறுவாய்ப்  பன்னீ  ரெழுத்து முயிரென மொழிப' எனக்
கூறுக என்றபடி.
 

2. இதன்கண்    "ககரமுதல்    னகரவிறுவாய்"    எனக்    கூறப்பட
வில்லையேயெனின்?
 

அது  முதற்  சூத்திரத்து முப்பது என்றதனாலும் இதன்கண் 'பதினெண்'
எழுத்தும் என்றதனாலும்  பின்வரும் "வல்லெழுத் தென்ப க ச ட த ப ற"
என்னுஞ்  சூத்திரம் முதலியவற்றானும்  உய்த்துணர்ந்துகொள்ளப்படும். இச்
சூத்திரமும் முதற்சூத்திரமும் நெடுங்கணக்கை அநுவதித்துக் கூறியனவாகும்.
 

3. முன்னர் என்றது 1-ம் சூத்திரத்தை.