நூன்மரபு63

32.

ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.
 

இது   நெட்டெழுத்தென்றவற்றுட்   சிலவற்றிற்கு   வேறோர்  குறியீடு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஆ ஏ ஓ  அம்மூன்றும்  வினா - ஆ ஏ ஓ என்று
கூறப்பட்ட அம் மூன்றும் வினா என்னுங் குறியினையுடைய என்றவாறு.
 

இதுவும்  ஆட்சியும்  காரணமும்  நோக்கிய   குறி,  வினாப்  பொருள்
உணர்த்தலின்.
 

உதாரணம் : 1உண்கா   உண்கே  உண்கோ  என  வரும்.  இவற்றுள்
2ஆகாரம்   இக்காலத்து   வினாவாய்  வருதலரிது.  நீயே  நீயோ என்பது
இக்காலத்து வரும். இவற்றுள் ஏ ஓ  என்பன இடைச்சொல்லோத்தினுள்ளுங்
கூறினார்,  ஏகார  ஓகாரங்கள் தரும் பொருட்டொகைபற்றி, 3இது மொழிந்த
பொருளோடொன்ற     வவ்வயின்      மொழியாததனை     முட்டின்று
முடித்தலென்னும்   உத்திக்கு   இனமாம்,   யகர   ஆகாரமும் வினாவாய்
வருதலின்.
 

(32)
 

33.

அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு
முளவென மொழிப விசையொடு சிவணிய
நரம்பின் மறைய வென்மனார் புலவர்.
 

இது  பிறன்கோட்கூறலென்னும்  உத்திபற்றி  இசை  நூற்கு வருவதோர்
இலக்கணமாமாறு கூறி, அவ் விலக்கணம் இந்நூற்குங் கொள்கின்றது.


1. உண்கா - உண்பேனா ?
 

2. ஆகாரமும்   ஏகாரமும்  எனவும்  பாடம்;  அது   பொருத்தமின்று
மகாலிங்கையர் பதிப்பு நோக்குக.
 

3. மொழிந்த   பொருளோடொன்ற    வவ்வயின்   மொழியாததனையு
முட்டின்று  முடித்தலென்னு  முத்தியாவது - எடுத்தோதிய  பொருண்மைக்
கேற்றவகையா   னப்பொருண்மைக்குச்   சொல்லாத   தொன்று  கொள்ள
வைத்தல். இங்கே  எடுத்தோதிய  பொருள் வினா ஆ ஏ ஓ அம் மூன்றும்
என்பது. அவற்றோடெடுத்தோதாத   பொருள்   யா  என்பது. அதனையும்
வினாவென்று     இவ்வுத்தியாற்   கொள்க   என்றபடி     இனமென்றது
உயிர்மெய்யாதலிற் போலும்.