90மொழிமரபு

வருதலில்லை - வ  என்று  சொல்லப்படுந்  தனிமெய்  யெழுத்தோடு கூடி
மொழிக்குமுதலாய் வருதலில்லை என்றவாறு.
 

எனவே, ஒழிந்தன மொழிக்கு முதலாம் என்றவாறாயிற்று.
 

உதாரணம் : வளை  வாளி  விளரி  வீடு  வெள்ளி  வேட்கைவையம்
வௌவுதல் என வரும். 
 

(30)
 

64.

ஆ எ, ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஆ எ ஒ   எனும்   மூவுயிர்  - ஆ எ ஒ  என்று
கூறப்படும்  மூன்று  உயிரும்,  ஞகாரத்து  உரிய -  ஞகார  ஒற்றொடுகூடி
மொழிக்கு முதலாதற்கு உரிய என்றவாறு.
 

எனவே, ஏனைய உரியவல்ல என்பதாம்.
 

உதாரணம் : ஞாலம் ஞெண்டு ஞொள்கிற்று எனவரும்.
 

'ஞமலிதந்தமனவுச்சூலுடும்பு' (பெரும்பாண் - 132) என்பது திசைச்சொல்.
ஞழியிற்று என்றாற்போல்வன இழி வழக்கு.
 

(31)
 

65. 

ஆவோ டல்லது யகர முதலாது.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்: ஆவோடு அல்லது யகரம் முதலாது - ஆகாரத்தோடு
கூடியல்லது யகரவொற்று மொழிக்கு முதலாகாது என்றவாறு.
 

உதாரணம்: யானை யாடு யாமம் எனவரும்.
 

யவனர்  யுத்தி  யூபம்  யோகம்  யௌவனம் என்பன வடசொல்லென
மறுக்க.
 

(32)
 

66.

முதலா வேன தம்பெயர் முதலும்.
 

இது மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி  ஆமென்கின்றது.
 

இதன் பொருள்: முதலாவும்  -  மொழிக்கு  முதலாகா என்ற ஒன்பது
மெய்யும்,  எனவும்  -  மொழிக்கு  முதலா  மென்ற   ஒன்பது  மெய்யும்
பன்னிரண்டுயிரும், தம்பெயர் முதலும் - தத்தம் பெயர் கூறுதற்கு முதலாம்
என்றவாறு.