சூ. 194 :

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

(51)
 

க - து :

கற்பொழுக்கமாகிய    இல்லற     வாழ்வின்     குறிக்கோள்
இது என்கின்றது.
 

பொருள் :   இருமைக்கும்  தமக்குத்  தப்பாது   காவலாக  அமைந்த
மக்களான் நிறைந்து, இல்லறத்திற்குத் துணை புரியும் ஏனைச்  சுற்றத்தொடு
மனையறத்தை மேற்கொண்ட கிழவனும் கிழத்தியும் ஊடியும் கூடியும் பெறும்
காம நுகர்ச்சி  நிரம்புதலான் முடிவு  கொள்ளுங்காலத்தே பற்று  நீங்கி வீடு
பெறுதற்குச்  சிறந்ததாகிய  செயலினை  நிகழ்த்துதல்  நிகழ்ந்து   முடிவுற்ற
இல்லற வாழ்க்கையான் எய்தும் பயனாகும்.
 

அஃதாவது,  இல்வாழ்க்கையை  மேற்கொண்ட  தலைவனும் தலைவியும்
தென்புலத்தார், தெய்வம்,  விருந்து, ஒக்கல், தான்  என்னும்  ஐம்புலத்தாறு
ஓம்பி  இயல்புடைய  மூவர்க்கும் துணை புரிந்து நன்கலமாகிய அறிவார்ந்த
மக்கட்பேறுற்று  இன்பம் நிறைந்து  ஏவலரும்  காவலருமாகிய சுற்றத்தொடு
அமர்ந்து இம்மை  இன்பமாகிய காம நுகர்ச்சியான் நிரம்பி முடிவுறும். அவ்
இல்லறத்தின்   குறிக்கோள்   மறுமைப் பேறாகிய  வீடு   பெறுதலாகலான்
அதனைப்பெறுதற்கு     ஆகும்    சிறந்தசெயலை  நிகழ்த்துதல்   கழிந்த
இல்லறத்தின் பயனாகும் என்றவாறு.
 

தமது துய்ப்பறிவான் எய்திய  மெய்யறிவினைப் பிறர்க்குத் தாம் ஒழுகும்
ஒழுக்கத்தாற்  புலப்படுத்த வேண்டுமென்பது  தோன்றப் ‘பயிறல்’ என்னாது
"பயிற்றல்" என்றார் என்க.