சூ. 293 : | தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே |
(17) |
க - து : | ஆறாறவையும் அன்னபிறவுமாக வரும் உவமச்சொற்களின் பொருளுணரும் முறைமை கூறுகின்றது. |
மேற்கூறிய உவமச் சொற்களை ஆசிரியர் ‘அன்ன’ ‘என்ற’ எனப் பெயரெச்ச வடிவாகவும் ஏய்ப்ப, உறழ, ஒப்ப என வினையெச்ச வடிவாகவும் அமைத்துக்கூறி அவை பல்குறிப்பின என அவற்றின் வடிவ இயல்பு கூறியதன்றி அவற்றின் பொருளும் அவை வினையுவமம் முதலிய நான்கற்கும் உரிமை பெற்று வருதற்குக் காரணமும் வெளிப்படக் கூறாமையான் புறனடை வகையான் அவற்றை உணர்ந்து கொள்ள இச்சூத்திரத்தான் உணர்த்துகின்றார் என்க. |
பொருள் :அன்ன, ஆங்க முதலாக மேற்கூறப்பெற்ற உவமச் சொற்கள் தாம் தோன்றிய உரியடி (வேர்நிலை) யானும் தமக்கு முன்னும் பின்னும் வந்து நிற்கும் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆயவற்றின் சார்பானும் தத்தம் வரலாற்று முறைமையான் பொருள் விளங்க நிற்கும். |
என்றது; ஒப்பில்வழியாற் பொருள் செய்வனவெல்லாம் இடைச்சொற்கள் என இடையியலுள் ஓதினமையான் ஒப்பு என்னும் ஒரு வாய்பாடு தவிர்ந்த ஏனைய வெல்லாம் வேறு வேறு பொருளுடையவை என்பதும் அவை அவ்வப்பொருள் வாயிலாகவே ஒப்புமையை உணர்த்தி நிற்கும் என்பதும் கூறியவாறாம். |