170. வாடைப் பாசறை
வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிர்பெய்த
வந்துலாய்த் துயர்செய்யும் வாடையது 1மலிபுரைத்தன்று.

(இ - ள்.) வெய்ய வலியினையுடையானது பரந்த வீடாரத்து வேல் வீரர் நடுக்கமுற வந்தியங்கி வருத்தம் பண்ணும் வாடைக்காற்றின் மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
2வாடை நலிய வடிக்கண்ணா 3டோணசை
ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல் - கோடல்
முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப்
பகையோடு பாசறையு ளான் .

(இ - ள்.) வாடைக்காற்று வருத்த மாவடுப்போன்ற கண்ணாளுடைய தோளை நச்சுதல் பட்டத்தையுடைய இளவாரணத்தான் நினையான் போலும்; காந்தண்முதல் மொட்டுடனே சுழல முதிர்ந்த நெருப்புப்போற் கோபித்துச் சத்துருக்கள் கெட்டோடும் பாடி வீட்டிலிருந்தான் எ-று.

பாசறையுளான் உள்ளான்கொலென்க.

(16)

1. மலிவு
2. நெடுநல் வாடையிலுள்ள இறுதி வெண்பா .
3. டோணிலை