192. பூவை நிலை
கறவை காவல னிறனொடு பொரீஇப்
புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று.

(இ - ள்.) ஆனிரையைக் காத்த மாயவன் திருவுருவோடு உவமித்துக் காட்டிடத்தலரும் காயாம்பூவைப் புகழ்ந்தது எ-று.

(வ - று.)
1பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் - மேவார்
மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருதலான்.

(இ - ள்.) காயா மலரும் செவ்விப்பூப்போல, பொலிந்த வீரக்கழலினையுடையோய், எப்பொருள் சீரியவை? யாங்கள் அறியேம்; பகைவர் சினத்துடனே வஞ்ச மல்லரது மாறுபாட்டை வென்ற இளமைப் பருவத்து மாயவனது திருமேனியோடு உவமைகொள்கையால் எ-று.

(4)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்; இ.வி.புறத்.சூ.19, மேற்.