212. நாண்மங்கலம்
அறந்தரு செங்கோ லருள்வெய்யோன்
பிறந்தநாட் சிறப்புரைத் தன்று.

(இ - ள்.) தருமத்தினையுண்டாக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்தநாளின் 1நன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பிமிர்தார்.
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதி றாந்திறப்பர் தாள்.

(இ - ள்.) வலிய யானையும் சிவந்த பொன்னும் பிறந்தநாளிற் பெற்றவர் விருப்பமுற்று இன்புறுதல் அற்புதமோ; வண்டினம் இசைக்கும் மாலையினையும் வெவ்விய மாறுபாட்டினையுமுடைய அரசரும் சங்கவளையுடையோர் தோளைவிரும்பித் தம்முடைய அரணங்களிற் கதவைத் தாம் தாளினை நீக்குவர், இந்நாளிற் படையோவாரென்று எ-று.

(24)

1. தன்மையை