240. போந்தை
கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பிற்
புலவேல் வானவன் பூப்புகழந் தன்று.

(இ - ள்.) பொருந்தா வேந்தர் கிட்டின பூசலிடத்துப் புலால் நாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப் புகழ்ந்தது எ-று.

(வ - று.)
1குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த்
2தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழும்
தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
போரெதிற் போந்தையாம் பூ.

(இ - ள்.) குடைபோன்மலரும் கோடலையுடைய தன்கொல்லிமலைச் சுனையிடத்துக் கட்டலரும் குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவை மலையான்; பக்கம் விளங்கும் பகைவர் தேர்த்தானை நடுங்கக் கோபிக்கும் திருந்திய வேலையுடைய சேரன், பூசல் தோற்றிற் பனந்தோடாம், அவன் சூடும் பூ எ-று.

(1)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்
2. தொடையளி