கொய்தழை யல்குல் கூட்டம் வேண்டி எய்துத லருமையி னிறப்பப் புகழ்ந்தன்று. (இ - ள்.) கொய்தழையான் அணிந்த அல்குலையுடையாள் தன் புணர்ச்சியை விரும்பிப் பொருந்துதற்கு அருமையான் மிகவும் புகழ்ந்தது எ-று. (வ - று.) பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க் கருமழைக்கண் வெண்முறுவற் பேதை-திருமுலை புல்லும் பொறியி லேனுழை நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே. (இ - ள்.) மிக்க மடப்பத்தாற் சிறந்த பார்வையினையும் சிறிய நுதலினையும் சிவந்த வாயினையும் கரியமழைபோலக் குளிர்ந்த கண்ணினையும் விளர்த்த எயிற்றினையுமுடைய மடவாள்தன் அழகிய முலையைத் தழுவும் விதியிலாதேனிடத்துத் தரியாதே ஓடாநின்றது, என்னுடைய நிறையில்லாத மனம் எ-று. (7) |