309. வரவெதிர்ந்திருத்தல்
முகைபுரை முறுவன் முள்ளெயிற் றரிவை
வகைபுனை வளமனை வரவெதிர்ந் தன்று.

(இ - ள்.) முல்லையரும்பன்ன நகையாற் சிறந்த கூரிய பல்லினையுடைய மடவாள் பல கூறுபடக் கைசெய்த செல்வமனையிடத்தே தலைவன் வருதலை ஏற்றிருந்தது எ-று.

(வ - று.)
காம நெடுங்கட னீந்துங்காற் கைபுனைந்த
பூமலி சேக்கைப் புணைவேண்டி - நீமலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய்
எல்லாக நெஞ்ச மெதிர்.

(இ - ள்.) ஆசையாகிய பெரிய கடலை நீந்துமிடத்துக் கைசெய்யப் பட்ட மலர்மிக்க சயனத்திடத்துக் கூட்டமாகிய தெப்பத்தை வேண்டி நீ விரைந்து போகாய்; தலைவன் இவ்விடத்து வருவதற்கு நினையாய்; நீ மயக்கம் நீங்கி விளக்கமுற என் நெஞ்சே, எதிரே எ-று.

எதிர் செல்லாயென்க.

(4)