பக்கம் எண் :

இல்லாண் முல்லையொடு பகட்டுமுல்லையென்றா
பான்முல் லையொடு கற்புமுல்லை யென்றாங்
கிருநான் முல்லையும் பொதுவியற் பால.

என்-னின், இதுவும், பொதுவியற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முல்லை முதலாகக் கற்புமுல்லை ஈறாகச்சொல்லப்பட்ட எட்டும் பொதுவியற்பாலவாம் எ-று. அவற்றுள் எ-று.

275. முல்லை

தடவரை மார்பன் றன்னமர் காதல்
மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) பெரிய மலைபோன்ற மார்பன் தன்னைமேவின அன்பினையுடைய மடப்பத்தினையுடையாளைக்கூடிய மிகுதியைச் சொல்லியது எ-று.

வ - று. ஊதை யுளர வொசிந்து மணங்கமழும்
கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற்- பேதை
குவைஇ யிணைந்த குவிமுலை யாகம்
கவைஇக் கவலை யிலம்.

(இ - ள்.) காற்று அசைப்ப வணங்கி மணநாறும்மாலைபோன்ற முல்லைக் கொடியை ஒக்கும் இடையினையுடையமடவாள் திரண்டு தம்மில் இணையொத்த குவிந்தமுலையினையுடைய மார்பைத் தழுவிக் கொண்டு துயரமிலேமாயினேம் எ-று.

முல்லைக்கொடிமருங்குற் பேதையாகமெனக் கூட்டுக.

(1)

276. கார்முல்லை

அருந்திறற் கட்டூ ரவர்வாராமுன்
கருங்கடன் முகந்து கார்வந் தன்று.

(இ - ள்.) பெறற்கரிய வலியினையுடைய பாசறையினின்றும்தலைவர் வருவதற்குமுன்னே கரியகடலை முகந்துகொடண்டு மேகம் வந்தது. எ-று

வ - று.1புனையும் 2பொலம்படைப் பொங்குளைமான்றிண்டேர்
துனையுந் துனைபடைத் துன்னார்-முனையுள்
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
3கடன்முகந்து வந்தன்று கார்.

(இ - ள்.) பூணும் பொற்படையாகிய மேலீட்டையும் எழுந்தசைந்த தலையாட்டத்தையுமுடைய குதிரை பூண்டதிண்ணியதேர் விரையும் கடுகுஞ் சேனையினையுடைய பகைவரது போரிடத்துக் கொலைத்தொழிலை ஏற்றுக்கொண்ட சேனையினையுடைய தலைவர் வருவதற்கு முன்னேகடனீரை முகந்துகொண்டு வந்தது மேகம் எ-று.

(2)

277. தேர்முல்லை

உருத்தெழு மன்ன ரொன்னார் தந்நிலை
திருத்திய காதலர் தேர்வர வுரைத்தன்று.


1. முல்லைப்பாட்டின் இறுதிச் செய்யுள். 2. 'பொலம்படை' : மலைபடு. 574; புறநா. 116; 19, 359 : 14. 3. பெருங். 3.24 : 76.