‘உற்ற' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஆவென்றும் மாவென்றும்
வரும் சொற்களின் இயங்கு திணையைப்பற்றிச் சொன்னார்;
நிலைத்திணையல்ல என்க. நிலைத்திணையாயின் ஆங்கோடு, மாங்கோடு
என்றல்ல தாகாது.
வெறிகமழ் தண்சிலம்பின் வேட்டமே யன்றிப்
பிரிதுங் குறையுடையான் போலுஞ் - செறிதொடீஇ
தேமான் இதணத்தேம் யாமாக நம்புனத்து
வாமான்பின் வந்த மகன்.
இதனுள் ‘தேமான் இதணத்தேம்' என்று நிலைத்திணையிலே
னகரத்தை மிகுத்த விடத்து மரபு வழுவாயிற்று என்றறிக. என்னை?
முன்னிலை நெடிலு மாவு மின்மிகப்
புணரு மியங்குதிணை யான
என்றாராகலின்.
சாவ, அகம் என்புழி ஏற்றசொல் வந்து வகரமும்
ககரமும் கெட்டுச்
சாக்குத்தினான், அங்கை என்றாயின.
(23)
சில ஒற்றுக்களின் புணர்ச்சி முடிபும்,
புணர்ச்சிக்குப் புறனடையும்
24.
ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
வந்துறழும் அன்ன வயனலக்கள் - சந்திகளின்
அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க
எல்லா முடியும் இனிது.
எ - ன்:
இதுவுஞ் சில ஒற்றுச்சந்திகள் முடியுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள்:
ஐந்தா முடலாகிய டகாரம் ஆறா முடலாகிய ணகாரமாம்;
ஆறா முடலாகிய ணகாரம் பதினாறா முடலாகிய ளகாரமாம்; ஒற்று மிகும்,
என்பது எச்சவும்மை ஆதலால் ஒற்றும் மிகும், உயிரும் மிகும்,
உயிர்மெய்யும் மிகும், மகரமும் னகரமும் தம்மில் ஒன்றாய் மயங்கவும்
பெறும்; வகரமும் யகரமும் தம்மில் ஒன்றாய் மயங்கவும் பெறும்; னகாரமும்
லகாரமும் தம்மில் ஒன்றாய் மயங்கவும் பெறும்; அடக்கும் வாயறிந் தடக்கி
முடிக்க முடியாதன வில்லை எ - று.
|