ஆ மா கோ - ஆ என்னும் பசுவின் பெயரும் மா என்னும் விலங்கின் பொதுப் பெயரும் கோ என்னும் இறைவனை உணர்த்தி நிற்கும் பெயரும் , னவ் அணையவும் பெறும் - உருபுகள் புணரும் இடத்து னகரச் சாரியை பொருந்தவும் பெறும் . ஆனை , ஆவை , மானை , மாவை , கோனை , கோவை என விகற்பித்து வருதல் காண்க . மற்றை உருபுகளோடும் இப்படியே ஒட்டுக . அணையவும் என்ற உம்மையால் , குவ்வுருபு , புணரும்போது , ஆனுக்கு , மானுக்கு , கோனுக்கு என உகரச் சாரியையும் உடன்பெறுதலும் . ஆவுக்கு , மாவுக்கு , கோவுக்கு என உகரச் சாரியை ஒன்றே பெறுதலும் , ஆவினுக்கு , மாவினுக்கு , கோவினுக்கு , என இன் சாரியையும் உகரச் சாரியையும் உடன் பெறுதலும் , ஆவினை , மாவினை , கோவினை , என இன் உருபு ஒழிந்த உருபுகள் புணரும்போது இன் சாரியை பெறுதலும் கொள்க . இனி , இரட்டுற மொழிதலால் , ஆமா என ஒரு சொல்லாய்க் காட்டுப் பசுவை உணர்த்தி நின்ற இடத்தும் , ஆமானை , ஆமானுக்கு , ஆமாவினுக்கு என இவ்விதிகள் பெறுதலும் , அணையும் என்று ஒழியாது பெறும் என்றமையால் . ஆன் , மான் , கோன் , ஆமான் எனத் தனி மொழிக்கண்ணும் னகரச் சாரியை வருதலும் கொள்க .
|