|
| பொதுப்பாயிரம் 2. ஆசிரியனது வரலாறு நல்லாசிரியன் இலக்கணம் | | 26 | குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னூலுரை யாசிரி யன்னே. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை - உயர்குடிப் பிறப்பும் சீவகாருண்ணியமும் கடவுள் வழிபாடுமாகிய இவைகளால் எய்திய மேன்மையும் , கலை பயில் தெளிவு - பல நூல்களிலே பழகிய தேற்றமும் , கட்டுரை வன்மை - நூல் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும்படி தொடுத்துச் சொல்லும் வன்மையும் , நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும் - நிலத்தையும் மலையையும் துலாக்கோலையும் பூவையும் ஒத்த குணங்களும் , உலகு இயல் அறிவு - உலக நடையை அறியும் அறிவும் , உயர் குணம் இனையவும் அமைபவன் - உயர்வாகிய குணங்கள் இவை போல்வன பிறவும் நிறையப் பெற்றவன் , நூல் உரை ஆசிரியன் - நூல் கற்பிக்கும் ஆசிரியன் ஆவான் .
|
|