எழுத்தியல்

பிறப்பு
முற்றாய்தம்

 
90குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆய்தப் புள்ளி-புள்ளி வடிவினதாகிய ஆய்தம் , குறியதன் முன்னர் - குற்றெழுத்தின் முன்னதாய் , உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து - உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறனுள் ஒன்றன் மேலதாய் வரும் .

எஃகு, கஃசு, இருபஃது, பஃறி என வரும் .

இச் சூத்திரம் மேற்கோள் ஆதலால் , தான் எடுத்து மொழிதல் என்னும் உத்தி .

வல்லின வகையால் இயல்பாக வரும் ஆய்தம் ஆறு , அவ்+கடிய = அஃகடிய எனத் திரிதல் என்னும் புணர்ச்சி விகாரத்தால் வரும் ஆய்தம் ஒன்று , அ+கான் = அஃகான் என விரித்தல் என்னும் செய்யுள் விகாரத்தால் வரும் ஆய்தம் ஒன்று , ஆக முற்றாய்தம் எட்டாதல் காண்க .