இலக்கணமுடையது இலக்கணப்போலி மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும் = இலக்கணமுடையது என்றும் இலக்கணப்போலி என்றும் மரூஉ என்றும் வழங்கும் மூவகை இயல்பு வழக்கும் , இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனும் முத்தகுதியோடு = இடக்கர் அடக்கல் என்றும் மங்கலம் என்றும் குழூஉக்குறி என்றும் வழங்கும் மூன்று தகுதி வழக்குடனே கூட , ஆறு ஆம் வழக்கு இயல் - அறுவகைப்படும் வழக்கு இலக்கணம் . 1. இயல்பு வழக்குஇலக்கணம் உடையது என்பது இலக்கணநெறியால் வருவது . இலக்கணப்போலி என்பது , இலக்கணம் இல்லையாயினும் , இலக்கணம் உடையது போல் அடிப்பட்ட சான்றோராலே தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருவது . மரூஉ என்பது , தொன்றுதொட்டு வருதல் இன்றி , இடையிலே , சில எழுத்துக் கெட்டும் , சில எழுத்துத் திரிந்தும், சில எழுத்துத் தோன்றியும் , இலக்கணத்தில் சிதைந்து , தானே மருவி வழங்குவது. இம்மூன்றும் , எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லால் கூறதலால் , இயல்பு வழக்கு எனப்பட்டன . 1. நிலம் , நீர் , தீ , காற்று , வானம் , நன்னிலம் , தண்ணீர் , வெந்நீர் இவை முதலானவை இலக்கணம் உடையன . 2. இல்முன் என்பதை முன்றில் என்றும் , நகர்ப்புறம் என்பதைப் புறநகர் என்றும் , புறவுலா என்பதை உலாப்புறம் என்றும் , கண்மீ என்பதை மீகண் என்றும் , கோவில் என்பதைக் கோயில் என்றும் , பொதுவில் என்பதைப் பொதுயில் என்றும் , வழங்கும் இவை முதலானவை இலக்கணப் போலி . 3. அருமருந்தன்னபிள்ளை என்பதை அருமந்த பிள்ளை என்றும் , மலைமானாடு என்பதை மலாடு என்றும் , சோழநாடு என்பதைச் சோனாடு என்றும் , பாண்டியனாடு என்பதைப் பாண்டிநாடு என்றும் , தொண்டை மானாடு என்பதைத் தொண்டைநாடு என்றும், அ இ என்னும் சுட்டுக்களை அந்த இந்த என்றும் மரவடி என்பதை மராடி என்றும் , குளவாம்பல் என்பதைக் குளாம்பல் என்றும் , யாவர் என்னும் வினாப்பெயரை யார், ஆர், என்றும் , யார் என்னும் குறிப்புவினையை ஆர் என்றும் , எவன் என்னும் குறிப்புவினையை என் , என்னை , என்ன என்னும் , தஞ்சாவூர் என்பதைத் தஞ்சை என்றும் வழங்கும் இவை முதலானவை மரூஉ. 2.தகுதி வழக்குஇடக்கரடக்கல் என்பது , நன்மக்களிடத்தே சொல்லத் தகாத சொல்லை , அவ்வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டாற் சொல்வது . மங்கலம் என்பது மங்கலம் இல்லாததை ஒழித்து மங்கலமாகச் சொல்வது . குழூஉக்குறி என்பது , ஒவ்வொரு கூட்டத்தார் யாதாயினும் ஒரு காரணம்பற்றி ஒரு பொருளினது சொற்குறியை ஒழித்து வேறொரு சொற்குறியால் சொல்வது . இம் மூன்றும் , இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லால் சொல்வது தகுதியன்று , வேறு ஒரு சொல்லால் சொல்வது தகுதி என்று நினைத்துக் கூறுதலால் , தகுதி வழக்கு எனப்பட்டன. 1. மலம் கழீஇ வருதும் என்பதைக் கால்கழீஇ வருதும் என்றும் , பீ என்பதைப் பகரவீ என்றும் , பவ்வீ என்றும் வழங்கும் இவை முதலானவை இடக்கரடக்கல். 2. செத்தாரைத் துஞ்சினார் என்றும் , ஓலையைத் திருமுகம் என்றும் , காராட்டை வெள்ளாடு என்றும் , இடுகாட்டை நன்காடு என்றும் வழங்கும் இவை முதலானவை மங்கலம். (3). பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றும் யானைப்பாகர் ஆடையைக் காரை என்றும், வேடர் கள்ளைச் சொல்விளம்பி என்றும் வழங்கும் இவை முதலானவை குழூஉக்குறி
|