மெய்யீற்றுப் புணரியல்

வகர ஈறு

 
235சுட்டு வகரமூ வினமுற முறையே
ஆய்தமு மென்மையு மியல்பு மாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சுட்டு வகரம் - அவ், இவ், உவ் என்னும் அஃறிணைச் சுட்டுப்பெயர்கள் ஈற்று வகரமெய் , மூவினம் உற - வல்லினமும் மெல்லினமும் இடையினமும் வர , முறையே ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும் - முறையாக ஆய்தமும் வரும் மெல்லினமும் இயல்பும் ஆகும்.

1.அவ்+கடிய = அஃகடிய, இவ்+கடிய = இஃகடிய உவ்+கடிய = உஃகடிய, என வல்லினம் வர ஆய்தமாகத் திரிந்தது.

2. அவ்+ஞானம் = அஞ்ஞானம், இவ்+ஞானம் = இஞ்ஞானம், உவ்+ஞானம் = உஞ்ஞானம், என மெல்லினம் வர வரும் எழுத்தாகத் திரிந்தது.

3. அவ்+யாவை = அவ்யாவை, இவ்+யாவை = இவ்யாவை, உவ்+யாவை = உவ்யாவை என இடையினம் வர இயல்பாயிற்று.

வேற்றுமைப் புணர்ச்சிக்கு அற்றுச் சாரியை பெறும் என மேல் விதித்தலால், இவ்விதி அல்வழிக்கு எனக் காண்க.