பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு விழா நிலையும் வழுவமைதியும்

 
393திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ
டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
திணை = ஐந்திணையும் , நிலம் = தேசமும் , சாதி = குலமும் , குடி = குடியும் , உடைமை ,= உடைமையும் , குணம் = குணமும் , தொழில் = தொழிலும் , கல்வி = வித்தையும் ஆகிய இவற்றைப்பற்றி வரும் , சிறப்பு ஆம் பெயரோடு இயற்பெயர் ஏற்றிடின் = சிறப்புப் பெயருடனே இயற்பெயரை ஒருபொருள் ஒருங்கு ஏற்குமாயின் , பின் வரல் சிறப்பு = அவ் இயற்பெயர் பின் வருதல் சிறந்த மரபாம்.

பின்வரல் சிறப்பே என்றதனால். முன் வரும் என்பதும் அது வழுவமைதி என்பதும் பெற்றாம்.


குன்றவன் கொற்றன், கொற்றன் குன்றவன்-----திணை.
அருவாள னழகன், அழக னருவாளன்-----நிலம்.
பார்ப்பான் பாராயணன், பாராயணன் பார்ப்பான்-----சாதி.
ஊர்கிழான் ஓணன், ஒணன் ஊர்கிழான்-----குடி.
பொன்னன் பொறையன், பொறையன் பொன்னன் ----- உடைமை.
கரியன் கம்பன், கம்பன் கரியன்-----குணம்.
நாடகி நம்பி, நம்பி நாடகி-----தொழில்.
ஆசிரியன் அமிழ்தன், அமிழ்தன் ஆசிரியன்-----கல்வி.

இன்னும், இயற்பெயர் முன்வரும் இடத்து வைத்தியநாத நாவலன், கச்சியப்பப் புலவன் என இறுதி விகாரமாக வருதலும் காண்க.

42