பொதுவியல்

இடைப் பிற வரல்

 
356உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும்
பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 

உருபு முற்று ஈரெச்சம் கொள்ளும் பெயர் வினையிடை= வேற்றுமை உருபுகளும் முற்றுக்களும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே , பிறவரலும் ஆம் ஏற்பன= பிறசொற்கள் வருதலுமாம் அவ் இடத்திற்குப் பொருந்துவன.

1. சாத்தான் (வயிறார) உண்டான்.
அறத்தை (அழகு பெறச்) செய்தான்.
வாளான் (மாய) வெட்டினான்.
தேவர்க்குச் (செல்வம்) வேண்டிச் சிறப்பெடுத்தான்.
மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான்.
சாத்தானது (இத்தடக்கை) யானை.
ஊர்க்கண் (உயர்ந்தவொளி) மாடம்.
சாத்தா (விரைந்து ஒடி) வா.
வேற்றுமை உருபு.
2. வந்தான் (அவ்வூர்க்குப் போன) சாத்தான்...வினைமுற்று.
3. வந்த (வடகாசி) மன்னன்.........பெயர் எச்சம்,
4. வந்து (சாத்தன் அவ்வூர்க்குப்) போயினான் ......வினை எச்சம்.

இனி "ஏற்பன" என்றதனால் , ஏலாதன வரின் பொருள் கவர்படும் ஆதலால், அவை இடையில் வரப் பெறா என்பதாயிற்று. கவர்படுதல்= இருபால்பட்டுத் துணிவு தோன்றா வண்ணம் நிற்றல்.

உண்டு விருந்தோடு வந்தான் என்புழி, விருந்தோடு என்பது, வருதலை விசேடியாது,உண்டலை விசேடித்தும் பொருள் கவர்படுதலால், இது போல்வன இடையில் வரப்பெறா என்றறிக.வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்புழி, வல்லம் எறிதல், வழுதிமேலாகாது, நல்லிளங்கோசர் மேலும் ஆகிப் பொருள் கவர்படுதலால் இது போல்வன இடையில் வரப்பெறா என்றறிக.
5